சொத்து குவித்த வழக்கு: ஜெ மனு மீது 19ல் உச்ச நீதிமன்றம் விசாரணை
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது வரும் 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவுள்ளது.
முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்தது தொடர்பாக 1997ம் ஆண்டு திமுக அரசு வழக்கு தொடர்ந்துத. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு பின்னர் பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து நாளை முதல் இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கையே முற்றிலுமாக ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இதன் மீது மார்ச் 19ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனால் பெங்களூர் நீதிமன்றத்தில் நாளை முதல் ஜெயலலிதா வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.