பணி நிரந்தரம் கோரி-டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
நெல்லை 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மக் பணியாளர் சங்கம் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்கிறது.
தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் மதுக்கடைகள் அரசு நிறுவனமான டாஸ்மாக் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 720 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுகடைகளில் மாநிலம் முழுவதும் 31 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு ஏற்று நடத்த துவங்கிய போது காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கின. பின்னர் வேலை நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது.
எனினும் 8 மணி நேர வேலை வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (மார்ச் 17ம் தேதி) ஒருநாள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போரட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திட்டமிட்டப்படி இன்று கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போரட்டத்தில் சிஐடியூ, ஏஐடியூசி ஆகிய தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை.
வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்தாலும் டாஸ்மாக் மதுக்கடைகள் வழக்கம்போல் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.