பென்னாகரம்: அரசு காரை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய துணை சபாநாயகர்!
பென்னாகரம்: பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு தமிழக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி அரசுக்கு சொந்தமான, ஸ்கார்பியோ கார் பயன்படுத்தியதை அடுத்து அந்த காரை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம் இடைத்தேர்தல் பணியில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய அனைத்து கட்சிகளும், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
திமுகவினர், வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்கள் கொடுப்பதாக தொடர்ந்து புகார் எழுந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
சைரன் பொருத்திய கார்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் பார்வையாளர் எச்சரித்தார். இதனையடுத்து திமுக அமைச்சர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பென்னாகரம் தேர்தல் பிரசார பணிக்கு, தமிழக துணை சபாநாயகர் துரைசாமி அரசுக்கு சொந்தமான, ஸ்கார்பியோ காரை பயன்படுத்தி வந்தார்.
இதுகுறித்து தேர்தல் பார்வையாளருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விசாரிக்க, போலீசாருக்கு தேர்தல் பார்வையாளர் உத்தரவிட்டார்.
போலீசார் விசாரணையில், "சைரன்' பொருத்தப்பட்ட அரசு வாகனத்தை தமிழக துணை சபாநாயகர் துரைசாமி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் இது குறித்து முழுமையான தகவலை தெரிவிக்க மாவட்ட எஸ்பி சுதாகர் மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications