'தந்தை'-திவாரிக்கு எதிரான வழக்கு விசாரிக்க உத்தரவு
டெல்லி: ஆந்திர முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியை தனது தந்தையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி வாலிபர் தொடர்ந்துள்ள வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநில ஆளுநர் பதவியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி கடந்த டிசம்பர் மாதம், செக்ஸ் விவகாரத்தில் சிக்கிக்கொண்டு, 'உடம்பு சரியில்லை' எனக் கூறி பதவியில் இருந்து விலகி டெல்லிக்கே திரும்பி விட்டார்.
இந்த விவகாரத்துக்கு முன்னதாக, டெல்லியில் ரோஹித் என்ற வாலிபர் திவாரியை தன்னுடைய தந்தை எனக் கூறிவந்தார். ஆனால், தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்க இதுமாதிரி புகார்கள் எழுவதாக என்.டி.திவாரி மறுத்து வந்தார்.
மேலும், என்னுடைய வாரிசு என சொல்லும் இவர் 18வது வயதிலேயே வந்து கோரியிருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் கழித்து வருவதற்கு உள்நோக்கம் இருக்கிறது என திவாரி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், டெல்லியைச் சேர்ந்த 31 வயது வாலிபரான ரோஹித் ஷர்மா, 'ஓட்டுரிமை வேண்டு்ம என்றோ, வாரிசு உரிமை தாருங்கள் என்றோ நான் கையேந்தி நிற்கவில்லை.
என்.டி.திவாரியிடம் இருந்து நான் சொத்தோ, அன்போ, பாசமோ எதிர்பார்க்கவில்லை. இதுமாதிரி பகட்டு வேடதாரிகள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு காட்டவேண்டும் என்பதே என் எண்ணம்.
எனக்கு என் அப்பா யார் என்பதை தெரிந்து கொள்ள எல்லா விதமான உரிமையும் இருக்கிறது. நான் 20 வயதில் இருந்து எந்தளவுக்கு மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தேன் என்று இவருக்கு தெரியுமா?.
மனரீதியாக நான் பாதிக்கப்பட்டதை என்னால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். நான் கேட்பது ஒரே விஷயம் தான். டிஎன்ஏ சோதனை நடத்துங்கள். அதன் மூலம் விஷயத்தை உறுதி செய்துவிட்டு இவர் தான் என் அப்பா என்பதை அறிவியுங்கள். அதுபோதும் எனக் கூறுகிறார்.
ரோஹித் கடந்தாண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு தொடர்ந்த போது என்.டி.திவாரி ஆந்திர மாநில ஆளுநராக இருந்தார்.
எனவே மாநில வரம்பை காரணம் காட்டி ரோஹித்தின் மனுவை உயர்நீதிமன்ற தனி நபர் பெஞ்ச் தள்ளுபடி செய்துவிட்டது.
இதை, எதிர்த்து ரோஹித் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். செக்ஸ் விவகாரத்தால் ஆளுநர் பதவியை துறந்துவிட்டு திவாரி டெல்லி திரும்பிவிட்டதால், முந்தைய காரணம் செல்லுபடியாகாது என ரோஹித் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என என்.டி.திவாரி தரப்பில் வாதிடப்பட்டது. ரோஹித்தின் அப்பீல் மனு மீது இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அதில், என்.டி.திவாரிக்கு எதிராக ரோஹித் தாக்கல் செய்துள்ள புகாரை நிராகரிக்க எந்த வித அடிப்படையும் இல்லை. எனவே வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதன்படி என்.டி.திவாரிக்கு எதிரான மனு மீதான வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 7ம தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடக்க உள்ளது.












Click it and Unblock the Notifications