விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் மனைவியின் புகார்- சிறைத்துறை கூடுதல் டிஜிபி மறுப்பு
சென்னை: மதுரையில் கார் விபத்தில் உயிரிழந்த டிஐஜியின் கார் டிரைவர் மனைவி தன் மீது குற்றம் சாட்டியுள்ளதை சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர் மறுத்துள்ளார்.
மதுரை கே.புதூரை சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவர், மதுரை மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு காரை ஓட்டும் டிரைவராகவும் செயல்பட்டு வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
பாலமுருகன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை சிறைத்துறை டி.ஐ.ஜி. அனுப்பியதாக சொல்லி சிறைத்துறை காரை எடுத்துக் கொண்டு நெல்லைக்கு புறப்பட்டார்.
விருதுநகர் பை-பாஸ் சாலையில் கார் சென்றபோது விபத்தில் சிக்கியது. இதில் பாலமுருகன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மீது செல்வி புகார் கூறியுள்ளார். குறிப்பாக கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர் சொல்லித்தான் தனது கணவர் காரை எடுத்துச் சென்றதாக அவர் கூறியுள்ளார். மேலும், கணவரின் உடலை வாங்கவும் அவர் மறுத்து விட்டார்.
கூடுதல் டி.ஜி.பி. ஷியாம் சுந்தரின் உறவினர்கள் ரயிலில் திருநெல்வேலி செல்வதாகவும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அவர்களை வரவேற்று, காரில் கன்னியாகுமரிக்கு அழைத்து செல்லவேண்டும் என்றும், மதுரை டி.ஐ.ஜி. கூறியதன் பேரில், அவரது காரை எடுத்துக் கொண்டு எனது கணவர் நள்ளிரவு புறப்பட்டார். அதில் தான் விபத்தில் சிக்கி அவர் இறந்துவிட்டார்.
திருநெல்வேலிக்கு வந்த கூடுதல் டி.ஜி.பி.யின் உறவினர்களை வரவேற்று அழைத்து செல்ல நெல்லை சிறையில் இருந்து யாரையாவது அனுப்பியிருக்கலாம். தேவையில்லாமல் எனது கணவரை அனுப்பி உயிர் பலி வாங்கி விட்டார்கள். எனது கணவரை இழந்து, எனது 2 குழந்தைகளோடு நான் அனாதையாக நிற்கிறேன் என்று செல்வி குமுறியுள்ளார்.
அவரை சமாதானப்படுத்திய போலீஸார், பாலமுருகனின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர்.
கூடுதல் டிஜிபி சொல்லித்தான் தனது கணவர் காரை எடுத்துக் கொண்டு நெல்லைக்குப் போனதாக செல்வி கூறியுள்ளது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் புகாரை ஷியாம் சுந்தர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது குடும்பத்தினர் யாரும் திருநெல்வேலிக்கு போகவில்லை. அவர்கள் எல்லோரும் சென்னையில் உள்ளனர். நான் குறிப்பிட்ட டிரைவரை திருநெல்வேலிக்கு காரில் அனுப்ப சொல்லி யாருக்கும் எந்த உத்தரவும் போடவில்லை. இந்த விஷயத்தில் எனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இறந்துபோன பாலமுருகனின் செல்போனை ஆய்வு செய்தால், அவரை திருநெல்வேலிக்கு யார் காரில் போக சொன்னார்கள் என்பதை கண்டறியலாம் என்றார் அவர்.
இதையடுத்து அனைவரின் கவனமும் மதுரை சிறைத்துறை அதிகாரிகள் மீது திரும்பியுள்ளது. யார் சொல்லி பாலமுருகன் காரை எடுத்துக் கொண்டு நெல்லைக்குப் போனார் என்பதை மதுரை சிறைத்துறை டிஐஜி சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நெல்லைக்குக் கிளம்புவதற்கு முன்பு டிஐஜி சொல்லி தான் போவதாக சக ஊழியர்களிடமும், மனைவியிடமும் கூறிச் சென்றுள்ளார் பாலமுருகன். டிஐஜியின் காரிலேயே அவர் போயிருக்கிறார். ஆனால் அந்தக் காரில் டிஐஜிக்களின் காருக்குரிய ஒரு நட்சத்திரம் இருக்கவில்லை. மாறாக 3 நட்சத்திரம் இருந்துள்ளது.
3 நட்சத்திரம் என்பது டிஜிபி அல்லது கூடுதல் டிஜிபி ஆகியோரின் கார்களில் மட்டுமே இருக்கும் சின்னமாகும். எனவே இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தற்போது தமிழக அரசின் உள்துறை தலையிட்டுள்ளது. பாலமுருகனை நெல்லைக்குப் போகுமாறு உத்தரவிட்டது யார், சிறைத்துறை டி.ஐ.ஜி. இந்த உத்தரவை போட்டாரா? இதில் கூடுதல் டி.ஜி.பி. ஷியாம் சுந்தர் சம்பந்தப்பட்டுள்ளாரா? ரயிலில் வந்தது அவரது உறவினர்களா? உள்ளிட்ட கேள்விகளை முதன்மைச் செயலாளர் மாலதி, மதுரை சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications