பென்னாகரம் 'திருவிழா'-அரசியல் கட்சிகள் 'அரோகரா'!
சென்னை: நான்கு முனைப் போட்டியைச் சந்தித்துள்ள பென்னாகரம் இடைத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
சகல முறைகளிலும் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர் முக்கிய கட்சிகள்.
பென்னாகரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடக்கிறது. திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ்க்குமரன், தேமுதிக சார்பில் காவேரிவர்மன் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 31 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக சார்பில் உணவுத் துறை அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு தேதி அறிவித்த நாள் முதலே 'வேலை'யை ஆரம்பித்து விட்டார்.
அமைச்சர்கள் அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு, சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், மதிவாணன், கே.பி.பி.சாமி, பெரியகருப்பன் ஆகிய அமைச்சர்கள் அடங்கிய பெரிய 'டீமே' தொகுதி முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றது.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். முதல்வர் கருணாநிதியும் ஒரு நாள் பிரச்சாரத்தில் ஈடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் இதுவரை பிரசாரம் பெரிய அளவில் சூடு பிடிக்கவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அந்த இரு நாட்களிலும் அதிமுகவினர் தூள் கிளப்புவார்கள் எனத் தெரிகிறது.
அதேசமயம், மூத்த நிர்வாகிகளான ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், தம்பிதுரை, நயினார் நாகேந்திரன், மதுசூதனன் உள்பட ஏராளமானோர் 'களப் பணி' ஆற்றி வருகிறார்கள்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பிரசாரம் செய்யவுள்ளார்.
இதுதவிர அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனி மேடையில் தனி ஆவர்த்தனம் செய்யவுள்ளது.
பாமக தரப்போ, படு வேகமாக காணப்படுகிறது. திமுகவினருக்கு நிகராக சளைக்காமல் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவற்கு முன்பே மக்களின் மன ஓட்டத்தை கண்டறியும் வேலையை முடித்து விட்டு தற்போது படு மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கிராமம் கிராமம் சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்து வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
பிரசாரத்தை விட திமுகவினரின் விதிமீறல்களை அம்பலப்படுத்துவதிலேயே பாமகவினர் குறியாக உள்ளனர். இலவச வேட்டி, சேலை லாரிகளைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். திமுகவினரைக் கண்காணிப்பதில் அவர்கள் படு கவனமாக உள்ளனர்.
தேமுதிக தரப்பு அலைகள் இல்லாத ராமேஸ்வரம் கடலைப் போல அமைதியாக காணப்படுகிறது. வேட்பாளர் காவேரிவர்மனுக்கு ஆதரவாக அந்த கட்சி நிர்வாகிகள் ஆஸ்டின், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்பட ஏராளமானோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். கட்சித் தலைவர் விஜயகாந்த் 18 முதல் 22ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார்.
விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் நான்கு நாள் பிரசாரம் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications