இளைஞர் காங். தேர்தலைப் பார்வையிட பிரியங்காவுடன் திருச்சி வந்த ராகுல்
திருச்சி: இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் பார்வையிடுவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற்று திருச்சி வந்திருந்தார். அவருடன் சகோதரி பிரியங்காவும் வந்திருந்தார்.
திருச்சி நாடாமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒய்.எம்.சி.ஏ அரங்கில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 5 வார்டு நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்காக நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆகியோர் தங்களுக்கு உரிய வாக்காளர் அடையாள அட்டை, போலீசார் வழங்கிய சிறப்பு அனுமதி அட்டை ஆகியவற்றை காட்டிய பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் உள்ளே அமர்வதற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. மற்ற யாரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்க வில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை நாலரை மணியளவில் திருச்சிக்கு வந்து சேர்ந்தார் ராகுல் காந்தி. உடன் பிரியங்காவும் வந்திருந்தார். பின்னர் இருவரும் காரில் ஏறி புத்தூர் வந்து சேர்ந்தனர்.
நேராக ஓட்டுப்பதிவு நடைபெற்ற அறைக்குள் சென்ற ராகுல் காந்தி தேர்தல் நடத்தும் பொறுப்பில் இருந்த கட்சி பிரமுகர்களிடம் தேர்தல் எப்படி நடக்கிறது? என்று கேட்டார். பின்னர் ஓட்டுபோடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த சிலரிடம் அவர்களது அடையாள அட்டையை வாங்கி பார்த்தார்.
அதன் பின்னர் வெளியே வந்த ராகுல் காந்தி சாமியானா பந்தலில் அமர்ந்து இருந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், வேட்பாளர்களிடம் கட்சி வளர்ச்சி குறித்து கருத்து கேட்டார்.
வேட்பாளர்களில் ஒருவரான ராஜேஷ், தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம் என்றார். அவரை நிமிர்ந்து பார்த்த ராகுல் காந்தி பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
பின்னர் மாலை 5.05 மணிக்கு ராகுல் காந்தியும், பிரியங்காவும் காட்டூருக்கு சென்றனர். காட்டூர் தேவேந்திரா திருமண மண்டபத்தில் 9 பஞ்சாயத்துக்களுக்கான இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.
மையத்துக்கு சென்ற ராகுல்காந்தி அங்கு நின்ற காட்டூர் பாப்பாக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் விஜயா சேகரை சந்தித்து பேசினார்.
அப்போது விஜயாசேகர் ராகுல்காந்தியை வரவேற்று, மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வாழ்த்துக்களை கூறினார். அதற்கு நன்றி கூறிய ராகுல்காந்தி தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் எவ்வாறு செயல்படுகிறது? என்று கேட்டார். அதற்கு விஜயாசேகர், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக ரொம்ப உபயோகமாக இருக்கிறது என்றார்.
இந்த ஆய்வை முடித்து விட்டு வெளியே வந்த ராகுல் காந்தியும், பிரியங்காவும் தங்களது திருச்சி பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மாலை 6.10 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சாலை மறியல்...
முன்னதாக ராகுல் காந்தியை சந்தித்து புகார் தர கட்சியின் மாநில துணை தலைவர் லட்சுமி, மாவட்ட சேவாதள தலைவர் பிச்சமுத்து உள்பட ஏராளமான காங்கிரசார் கூடியிருந்தனர். அவர்கள் அங்கு நிற்பதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து, கலைந்து போகும்படி கூறினார்கள்.
கலைந்து செல்ல மறுத்த அவர்கள், ராகுலை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியபடி கட்சி கொடிகளுடன் நடுரோட்டில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையொட்டி, 2 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், இதுகுறித்து ராகுலிடம் புகார் அளிக்கவே தாங்கள் வந்ததாகவும் கைதான துவாக்குடி பால்ராஜ் என்பவர் கூறினார்.