காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறை
ராசிபுரம்: கல்லூரி மாணவி மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு, ராசிபுரம் சார்பு நீதிமன்றம், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரத்தை சேர்ந்தவர் சீமா (25). இவர் கடந்த 2008 ம் ஆண்டு நாமக்கல் அரசுக் கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஆறுமுகம் (29), சீமாவை ஒருதலையாக காதலித்து வந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளவும் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ஆறுமுகம் சீமாவுக்கு அண்ணன் முறை என்பதால், அவரது காதலுக்கு சீமா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் 2008 ஜனவரி முதல் தேதி அன்று , சீமா, அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆறுமுகம், கையில் மறைத்து வைத்திருந்த சல்ப்யூரிக் ஆசிட்டை (கந்தக அமிலம்) சீமா மீது ஊற்றி விட்டு ஓடி விட்டார்.
இதில் படுகாயமடைந்த சீமாவுக்கு, ஒரு கண்பார்வை போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குண்சேகரன், குற்றவாளி ஆறுமுகத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாக சீமாவுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அந்த தொகையை அவரால் செலுத்த இயலவில்லை என்றால், அவரது சொத்துக்களை வருவாய்த் துறையினர் ஜப்தி செய்து, அதை ஏலம் விட்டு, அந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண் சீமாவுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் நிகழ்வு உள்ளிட்டவைகளுக்காக இரக்கம் காட்டி ஆறுமுகம் தண்டனையை குறைக்கக்கூடாது என்றும், 10 ஆண்டு சிறை தண்டனையை ஆறுமுகம் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications