புதிய சட்டசபையின் முதல் நாளிலேயே ஜெ. ஆப்சென்ட்- அதிமுக வெளிநடப்பு

தமிழக புதிய சட்டசபையின் முதல் நாள் அலுவல் இன்று நடந்தது. அதில் நிதியமைச்சர் அன்பழகன் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்றைய கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை.
அதேசமயம், அதிமுக உறுப்பினர்கள் கருப்பு உடையில் வந்திருந்தனர். அன்பழகன் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும் அவர்கள் எழுந்து நின்று கோஷமிட ஆரம்பித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு புதிய சட்டசபைத் திறப்பு விழா தொடர்பான அழைப்பு முறையாக வழங்கப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை அமருமாறும், இல்லாவிட்டால் வெளியேறுமாறும் சபாநாயகர் ஆவுடையப்பன் எச்சரித்தார். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் சமீபத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பார்தது தொகுதி நலன் தொடர்பாக பேசிய கோவில்பட்டி மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொள்ளாமல் அவையிலேயே அமர்ந்திருந்தனர்.
இந்த இரு எம்எல்ஏக்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
அதிமுகவினரைத் தொடர்ந்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.
அதிமுக பெண் எம்எல்ஏக்கள் கருப்பு சேலையில் வந்திருந்தனர்.
வெளிநடப்பு செய்த பின் நிருபர்களிடம் பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம்,
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தவறிய திமுக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம்.
விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கொடுக்க தவறிய, மின்வெட்டை மேலும் விரிவுபடுத்திக் கொண்டு அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளிக்கொண்டு இருக்கிற, நதி நீர் பிரச்சினைகளில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துக் கொண்டு இருக்கிற திமுக அரசை கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு தமிழ்நாடு தலைமை செயலகத்திற்கு தனி கட்டிடம், சொந்த கட்டிடம் வேண்டும் என்று நினைத்து அதற்கான திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீட்டிய திட்டங்களுக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தன்னுடைய அதிகாரத்தால் முடக்கிய முதல்வரை கண்டித்தும் தற்போது பழைய சட்டமன்ற வளாகத்திலும் புதிய சட்டமன்ற வளாகத்திலும் தன்னுடைய உருவ படங்களை திறந்து வைத்து கொண்டதை கண்டித்தும் இன்று வெளிநடப்பு செய்தோம்.
சட்டமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை இரண்டு முறை முதல்வராகவும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் ஜெயலலிதாவுக்கு முறையாக அனுப்பி வைக்காமல் ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிற இந்த ஆட்சியை கண்டித்தும் நாங்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அமரும் பகுதியில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications