பென்னாகரம் - திமுக வேட்பாளர் இன்பசேகரனை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட பருவதன அள்ளி புதூர் கிராமத்தில் ஓட்டு கேட்க வந்த திமுக வேட்பாளர் இன்பசேகரனை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகரம் அருகே உள்ளது பருவதன அள்ளி புதூர் கிராமம். இங்கு சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருதாகவும், நல்ல குடிநீர் பெற வேண்டும் என்றால், 2 கிமீ தொலைவு சென்று தான் தண்ணீர் கொண்டு வரவேண்டும்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரி பருவதன அள்ளி பஞ்சாயத்து தலைவரிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பிரச்சனைக்கு யாரம் தீர்வு காணவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பென்னாகரம் சுற்று வலம் வந்துகொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
திமுக வேட்பாளர் இன்பசேகரன் தனது பிரிவாரங்களுடன் பருவதன அள்ளிப்புதூர் கிராமத்துக்கு ஓட்டு கேட்பதற்காக சென்றார்.
அப்போது, அங்கு திரண்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் அவரை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.