தென் மாவட்டங்களை கலக்கிய கொள்ளை கும்பல் கைது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 240 பவுன் நகை பறி்முதல் செய்யப்பட்டது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் புகுந்து ஒரு கும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்தது.
இந்த கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்களை வலைவீசி தேடிய போலீசார் பரமக்குடியை சேர்ந்த கோட்டை ராசு, சாயல்குடியை சேர்ந்த வாசு, கம்பத்தை சேர்ந்த சேகர், வீராங்கன், சந்திரன், ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 240 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் மீது நெல்லையில் 33, தேனியில் 2, மதுரையில் 6, விருதுநகரில் 5 வழக்குகள் என மொத்தம் 46 வழக்குகள் உள்ளன.
கொள்ளையடித்த நகைகளை விற்க இவர்களுக்கு உதவி செய்த கம்பத்தை சேர்ந்த தாஜூதீனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.