கோவை மேற்கில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ரூ. 284 கோடியில் வெளிவட்டச் சாலை
சென்னை: கோவை மேற்குப் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய அங்கு ரூ. 284 கோடியில் புதிய வெளி வட்டச் சுற்றுச்சாலை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரம்..
சென்னைக்கு அடுத்து கோவை நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் பெருகி வருகிறது. குறிப்பாக மேற்குப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்கவும், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் கோவையில் ரூ. 284 கோடி மதிப்பீட்டில் புதிய வெளிவட்டச் சுற்றுச்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் நகரில் உள்ள அனைத்து முக்கியச் சாலைகளும் இந்த சுற்றுச்சாலையுடன் இணைக்கப்படும்.
இதேபோல, கோவை-மேட்டுப்பாளையம் இடையே நான்கு வழிசாலை அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பொருட்டும், நெரிசலைக் குறைக்கும் வகையிலும் ரூ. 500 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.
சென்னை ராஜிவ் காந்தி சாலையில் (பழைய மகாபலிபுரம் சாலை) புதிய மேம்பாலம் கட்டப்படும்.
தமிழகத்தில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிதாக 3000 பேருந்துகள் வாங்க ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நகர்ப்புறங்களில் குடிசைகளை அகற்றி அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட ரூ. 300 கோடி ஒதுக்கப்படும்.
அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 508 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழும் மகளிர் தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெருமளவில் இல்லை. எனவே வரும் நிதியாண்டில் அந்த மகளிரைக் கொண்ட சுய உதவிக் குழுக்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
ஓலைக் குடிசைகளை அகற்றி நிரந்தர கான்க்ரீட் வீடுகளாக மாறறும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ. 1800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications