பாஜக புதிய நிர்வாகிகள் தேர்வு - சத்ருகன் சின்ஹா கடும் அதிருப்தி
மும்பை: யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட தகுதியான தலைவர்களுக்கு பாஜகவில் முக்கிய நிர்வாக பொறுப்புகளைக் வழங்கியிருக்க வேண்டு்ம் என்று பாஜக எம்பி சத்ருகன் சின்ஹா கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு குறித்து நடிகரும், எம்பியுமான சத்ருகன் சின்ஹா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'கட்சிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் தகுதி வாய்ந்த முக்கியமான சிலரது பெயர் அதில் விடுபட்டுவிட்டது.
பிகார் பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு கட்சியில் பொறுப்பு எதுவும் தரப்படவில்லை.
பிகாருக்கு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிக்கு அங்கு நல்ல தலைவர் தேவைப்படுகிறார். பிகாரில் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சின்ஹாவுக்கு பொறுப்பு தரப்பட்டிருக்கவேண்டும்.
தகுதி வாய்ந்த சிலருக்கு கொடுக்கவேண்டிய பதவிகளை வேறு சிலருக்கு கொடுத்துள்ளனர். இது சரியல்ல. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்களை கலந்து ஆலோசிக்காமலேயே பாஜக நிர்வாகிகள் பட்டியலைத் தயார் செய்துள்ளனர்.
எனக்குக் கூட கட்சியில் எந்த பொறுப்பும் தரப்படவில்லை. கட்சியின் மூத்த தலைவர் என்பதால் நான் கட்சி விதிகளை மதித்து நடந்து வருகிறேன்.
இதனால் கட்சி நிர்வாகிகள் பட்டியல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கிறேன். ஆனாலும் புதிய நிர்வாகிகள் பட்டியலில் எனக்குத் திருப்தியில்லை' என்றார் அவர்.