'நெஞ்சம் பூரிக்கும் பட்ஜெட்...' -திருமாவளவன்
சென்னை: தமிழக அரசின் 2010-11-ம் ஆண்டுக்கானண பட்ஜெட் நெஞ்சைப் பூரிக்க வைக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய சட்டப் பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (19-03-2010) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டி எழுப்பப்பட்டு அதில் முதல்முதலாய் சட்டப் பேரவை கூடியுள்ளதும், முதல் கூட்டத்திலேயே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பதும் தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் போற்றுதலுக்குரிய சிறப்பு நிகழ்வாகவும், மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும் பெரும் புகழை ஈட்டித்தரும் சாதனையாகவும் அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் பாராட்டுதலுக்குரிய எண்ணற்ற திட்டங்களை அறிவித்திருப்பது பெரும் பூரிப்பை அளிக்கிறது. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் திட்டத்தின்கீழ் 3,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதும், கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படுகிற வெள்ளச் சேதங்களைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், பலகோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத் தடுப்புப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்திருப்பதும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் உடல் ஊனமுற்றோர் எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறையை உருவாக்குவது, திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி அமைப்பது, அனைத்து அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கு கட்டண விலக்கு அளிப்பது, விழுப்புரத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பது, ஒவ்வொரு ஊராட்சியிலும் சமூகக் கூடங்களை அமைப்பது போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்து மாபெரும் சாதனையாளர் என்பதை மீண்டும் நிறுவியுள்ளார்.
ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மக்கள் நலத் திட்டங்கள் தமிழக மக்களிடம் பெருமதிப்பையும் பாராட்டுக்களையும் ஈட்டித் தந்துள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களை ஒப்புயர்வற்ற மகத்தான சாதனையாளராக, மக்களின் நெஞ்சம் ஈர்த்த மாமனிதராக உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
தமிழக அரசின் இந்த நிதிநிலைஅறிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் மனமாரப் பாராட்டி வரவேற்கிறது.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications