மணிசங்கர், ஜாவேத் அக்தர் ராஜ்யசயா எம்பிக்களாக நியமனம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், பிரபல இந்தி கவிஞர் ஜாவேத் அக்தர் உள்பட 5 பேர் ராஜ்யசபா எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 5 பேர் ராஜ்யசாவுக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மணிசங்கர் அய்யர் உள்பட 5 பேர் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர் மூத்த காங்கிரஸ் தலைவராவார். முன்னாள் மத்திய அமைச்சரான இவர் ராஜிவ் குடும்பத்துக்கு நெருக்கமானவர். இதனால் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தி கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர், பத்மபூஷண் விருது பெற்றவர் ஆவார். ஷோலே உள்ளிட்ட பல படங்களுக்கு உரையாடலும் எழுதியவர் ஆவார். மிகச் சிறந்த சிந்தனையாளர்.
இவர்கள் தவிர ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இலக்கியவாதியான டாக்டர் ராம்தயாள் முண்டா, மராட்டிய மாநிலம் கொங்கன் பகுதியை சேர்ந்த தலித் இனத்தைச் சேர்ந்த பொருளாதார மேதையான டாக்டர் பாலசந்திர முங்கேகர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பழம்பெரும் நாடக நடிகையான ஜெயஸ்ரீ ஆகியோரும் ராஜ்யசபா எம்பிக்களாக நியமி்க்கப்பட்டுள்ளனர்.