தேர்தல் ஆணையர்களுக்கு பணி பாதுகாப்பு-பிரதமருக்கு நவீன் சாவ்லா கடிதம்

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். 19 பக்கம் கொண்ட இந்தக் கடிதத்தை கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதியே பிரதமருக்கு சாவ்லா அனுப்பியுள்ளார். ஆனால், இந்த விவரம் இப்போது தான் வெளியில் வந்துள்ளது.
தேர்தல் ஆணையர் பதவியிலிருந்த தன்னை முன்பிருந்த தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தன்னிச்சையாக நீக்க முயன்றது குறித்த சர்ச்சைக்குரிய சம்பவத்தை கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வரும் ஜூலை மாதம் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் சாவ்லா தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உள்ளது. இதேபோல, தேர்தல் ஆணையர்களின் பதவிகளுக்கும் அரசியல் சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்றதன்மை மற்றும் நம்பகத்தன்மை தொடர்பாக பல லட்சம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்திலும், தேர்தல் அணையர் பதவிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் விதத்திலும் வருங்காலத்தில் எந்தச் சம்பவமும் நடைபெறாது என்று உறுதியாக கூற முடியாத நிலையே தற்போது நிலவுகிறது.
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மை மேலும் வலுப்பெறவும், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவும் இந்த விஷயத்தில் பிரதமர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே நடந்த தேவையற்ற, விரும்பத்தகாத இரு சம்பவங்களை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அலைகழித்த சேஷன்:
கடந்த 1993ம் ஆண்டு டி.என். சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த போது, தேர்தல் ஆணையர்களாக எம்.எஸ். கில்லும், ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சேஷன், ஒன்றரை ஆண்டுகளாக தேர்தல் ஆணையர்கள் இருவருக்கும் எந்தப் பணியையும் ஒதுக்கீடு செய்யாமல் அலைக்கழித்து வந்தார். எனினும், சேஷனின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசியல் சட்டத்தின் 324வது பிரிவின் 5வது உள்பிரிவு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தனிப்பெரும் அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், தனது பரிந்துரையின்படி தேர்தல் ஆணையர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என்றும் சேஷன் வாதிட்டார். தனக்கு இணையாகத் தேர்தல் ஆணையர்களைக் கருத முடியாது என்றும் அவர் கூறிவந்தார்.
கோபாலசுவாமி..
கடந்த ஆண்டில் இதேபோல மற்றொரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தது. தலைமைத் தேர்தல் ஆணையராகப் இருந்த கோபாலசுவாமி, தேர்தல் ஆணையராக இருந்த என்னை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார். எனினும், தங்களது (பிரதமர்) தலைமையிலான மத்திய அரசின் ஆலோசனையை ஏற்று, அந்தப் பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
இந்த இரு சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் ஆணையர்களுக்கு இருந்த நன்மதிப்பு தகர்ந்தது. அதோடு, தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், தேர்தல் ஆணையர்களுக்கும் இடையிலான உறவுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்து செயல்படுவதிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளது போல, தேர்தல் ஆணையர்களுக்கும் அரசியல் சட்ட பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதற்காக அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்.
இவ்வாறு தனது கடிதத்தில் சாவ்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications