நித்யானந்தா வழக்கு-சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

பெங்களூர் அருகே பிடுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தியான பீட சாமியார் நித்யானந்தா மீது செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
தியான பீடத்தின் முன்னாள் ஊழியரும், சிஷ்யருமான நித்ய தர்மானந்தா லெனின் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. பெங்களூரை அடுத்துள்ள ராமநகர் மாவட்டம் பிடுதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக போலீசார் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றும்போது முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்கள் தமிழில் இருந்தன. அதை கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு எதிராக புகார் கொடுத்த நித்ய தர்மானந்தா என்ற லெனினை பிடித்து விசாரிக்க பிடுதி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திகேயன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் நித்யானந்தா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
கார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவில், பொது மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் நல்ல பணியில் ஈடுபட்டுள்ள நித்யானந்தா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை தனித்தனியாக விசாரித்தால் உண்மை வெளியே வராது.
எனவே, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் நியாயம் கிடைக்கும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுபற்றி வருகிற 24ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications