மொழி குறித்து இளங்கோவனின் கண்டுபிடிப்பு: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
சென்னை: தமிழினப் பகைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
சென்னையில் மார்ச் 21ம் தேதி நடந்த குமரி அனந்தன் 77வது பிறந்த நாள் விழாவில் பேசிய போது, தமிழகக் காங்கிரஸ் கோஷ்டிகளில் ஒன்றின் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “மொழி என்பது வெறும் ஓசைதான், நாம் பேசினால் தமிழ் மொழியும், இங்கிலாந்து நாட்டவர் பேசினால் ஆங்கில மொழியும் ஓசையாக வரும். இந்த ஓசையை வைத்துக் கொண்டு என்னுடைய மொழி தான் பெரியது என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் தமிழுக்கு எதிரி இல்லை என்று கூறியுள்ளார்.
மொழியியல் குறித்த இந்த வரையறுப்பு பெரும் பெரும் மொழி ஆராய்ச்சியாளர்கள் அறியாத புதிய செய்தியாக உள்ளது. உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க மொழியியல் மேதை நோம்சாம்ஸ்கி கூட அறியாத கண்டுபிடிப்பு இது!.
எனவே இளங்கோவன் தமது இந்தக் கண்டுபிடிப்பை சோனியா காந்தியிடமும் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் கூற வேண்டும். மொழி என்பது வெறும் ஓசை மட்டும்தான், இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் திணிக்காதீர்கள், அரசமைப்புச் சட்ட விதி 343யை திருத்துங்கள். இந்தி என்பது வெறும் ஓசைதான், அது தேசிய மொழி அன்று என்று அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்று திமுக ஆட்சியின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை எதிர்த்தார் இளங்கோவன். தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும்தான் வாழ்கிறார்களா, தமிழை வழக்கு மொழியாக ஆக்கும்படி தீர்மானம் போட்டது தவறு என்று கூறினார்.
உலகத்தில் உயர்தனிச் செம்மொழியாக விளங்கும் தமிழைத் தற்குறித்தனமான கருத்துகள் கூறி இழிவுபடுத்திய இளங்கோவனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரு தமிழினப் பகைவர்.
தமிழுக்கு எதிராகத் தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் நச்சுக் கருத்துகளைத் தடுக்கவேண்டுமெனில், தமிழ்நாட்டை விட்டு அவரை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications