Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹெட்லியிடம் இந்தியா விசாரணை: இன்னும் முடிவெடுக்கவில்லை-யு.எஸ்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்தியாவை அனுமதிப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா திடீரென கூறியுள்ளது.

இதனால் ஹெட்லியை இந்தியா விசாரிக்குமா, இல்லையா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதல் வழக்கில் தனது தொடர்பை சமீபத்தில் சிகாகோ கோர்ட்டில் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தான் ஹெட்லி. இதன் மூலம் மரண தண்டனையிலிருந்தும், நாடு கடத்தப்படும் அபாயத்திலிருந்தும் அவன் தப்பி விட்டான்.

இதனால் இந்தியா பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் ஹெட்லியை கொண்டு வர தொடர்ந்து முயற்சிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

இதற்கிடையே, ஹெட்லியை விசாரிக்க இந்திய விசாரணைக் குழுவை அனுமதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. விசாரணைக் குழுவுடன் தயாராக இருக்குமாறு இந்தியாவை அது கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஹெட்லியை இந்தியா விசாரிக்கலாம். குழுவைத் தயார் படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் கூறின.

இதையடுத்து இந்திய அரசு, ஹெட்லியை விசாரிக்க அனுப்ப வேண்டிய உளவுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை தயார் செய்யும் பணியில் இறங்கியது. இன்னும் 2 நாளில் டீம் தயாராகி விடும் என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தற்போது புதுக் குழப்பம் வந்துள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிம்மோத்தி ரோமர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், பாகிஸ்தானிய அமெரிக்கர் டேவிட் கோல்மேன் ஹெட்லியை நேரடியாக இந்திய அதிகாரிகள் விசாரிக்க அனுமதிப்பது குறித்து அமெரிக்க அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ரோமர்.

இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் முன்பு கூறுகையில், ஹெட்லியை இந்தியா நேரடியாக விசாரிக்க எந்தத் தடையும் இல்லை. இந்தியா நேரடியாக விசாரிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இவர் கூறியதைத் தொடர்ந்துதான் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர், ப.சிதம்பரத்திற்குப் போன் செய்து குழுவைத் தயார்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்தே உள்துறை அமைச்சகமும், தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைக் குழுவைத் தயார் செய்யும் பணியில் இறங்கின.

இந்த நிலையில் இந்தியாவை விசாரணைக்கு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2006 முதல் 2008 வரை இந்தியாவுக்கு பலமுறை வந்து போயுள்ளான் ஹெட்லி. மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வீடியோவில் பதிவு செய்தும் தகவல்கள் சேகரித்தும் உளவு பார்த்து லஷ்கருக்குக் கொடுத்துள்ளான். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் அவன் இந்தியா வந்துள்ளான்.

மும்பைத் தாக்குதலில் இவனும், ராணாவும் மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்காவுக்குப் போயிருந்த இந்திய விசாரணைக் குழுவை கடைசி வரை காக்க வைத்து கடுப்படித்து அனுப்பி வைத்திருந்தது அமெரிக்க எப்.பி.ஐ. தற்போது ஹெட்லி வாக்குமூலம் கொடுத்து விட்டதால் நேரடியாக விசாரணை நடத்த இந்தியாவை அனுமதிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

நேரடியாக விசாரணை நடத்த வாய்ப்பு கிடைத்தால், ஹெட்லியிடம் விசாரணை நடத்தி அவனிடமிருந்து பெறும் வாக்குமூலத்தை வைத்து லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத்தை குறி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சயீத் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா பல முறை டோசியர்களைக் கொடுத்தும் கூட அது கொட்டாவி விட்டபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹெட்லி வாயால் பெறப்படும் தகவல்களைக் கொண்டு பாகிஸ்தானை நெருக்குதலுக்கு உட்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+