வேறு இடங்களிலிருந்து இருதயங்கள் கொண்டு வரப்பட்டு ஒரே நேரத்தில் 2 பேருக்கு ஆபரேஷன்
சென்னை: வெவ்வேறு மருத்துவமனைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு இருதயங்களைக் கொண்டு, ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு சென்னை மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த உணவுத் தொழில்நுட்ப பொறியாளர் பவானிசங்கர் (22) என்பவருக்கு இருதயத்தில் கோளாறு ஏற்பட்டது. இதயத்தை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக வேறு ஒரு மாற்று இதயத்தை பொருத்துவதே அவரது உயிரை காக்க ஒரே வழி என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதற்காக, மாற்று இருதயம் கேட்டு அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அதற்காக அவர் காத்திருந்தார். இதற்கிடையே 2 முறை அவருக்கு தேவையான இருதயம் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அது அவருக்கு பொருத்தமானது இல்லை எனத் தெரியவந்தது.
இதுபோல், சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த சவுண்ட் என்ஜினீயர் சஞ்சய் (32) என்பவருக்கும் இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை செய்தும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து, அவருக்கும் மாற்று இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மாற்று இருதயம் பொருத்துவதற்காக அவர் 3 மாதங்களாக காத்திருந்தார்.
இந்த நிலையில், இரு இளைஞர்களுக்கும் உடல்நிலை மிகவும் மோசமானது. மூச்சுவிடுவதற்கே சிரமப்பட்டு வந்தார்கள். அவர்கள் இருவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, எங்கு இருதயம் கிடைக்கிறதோ உடனடியாக அவற்றை பெற்று இருவருக்கும் பொருத்தலாம் என்று உறுப்பு மாற்று செய்வதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில், திருவண்ணாமலை ஆரணியை சேர்ந்த குப்பன் (45) என்பவர் உயிரிழந்ததும், அவரது உடல், சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருப்பதும், சென்னை போரூரில் சாலை விபத்து ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்த லோகநாதன் (32) என்பவரின் இருதயம் இருப்பதும், அவற்றை வேறு நபர்களுக்கு பொருத்த அவர்களது பெற்றோரும், உறவினர்களும் அனுமதி அளித்ததும் தெரியவந்தது.
இது பற்றிய தகவல், 18-ந் தேதி இரவு 10.20 மணிக்கு, சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியனின் பிரண்டியர் லைப்லைன் மருத்துவமனைக்கு கிடைத்தது. இதை தொடர்ந்து, இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தார்கள்.
டாக்டர்கள் எதிர்பார்த்தபடி, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஒரு இருதயமும், அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த மற்றொரு இருதயமும் எடுக்கும் பணி, அதிகாலை 3 மணிக்குத் தொடங்கியது. அங்கிருந்து இருதயம் எடுக்கப்பட்டதும், அந்த இரண்டு இருதயங்களும் விரைவாக, எந்த வித பிரச்சினையுமின்றி செரியன் மருத்துவமனைக்கு சென்று சேருவதற்கு, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ரவி ஏற்பாடுகளை செய்தார்.
இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை நுங்கம்பாக்கம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பரணி செய்திருந்தார்.
இதன் காரணமாக, அந்த இரண்டு இருதயங்களும் எந்தவித தடையுமின்றி, செரியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு கே.எம்.செரியன் வழிகாட்டுதலின் பேரில் டாக்டர் பிரியா ஜெபகரன் மற்றும் குழுவினர், பக்கத்து, பக்கத்து அறைகளில் வைத்து இரு இளைஞர்களுக்கும் மாற்று இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தினார்கள். இதுபோன்ற அறுவைசிகிச்சை, ஆசியாவிலேயே முதல்முறையாக நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த மருத்துவமனையினர் தெரிவித்துள்ளனர்.