போலி சீல்-நெல்லையில் இறைச்சி பறிமுதல்
நெல்லை மாநகரில் 50க்கும் மேற்பட்ட ஆட்டிறைச்சி கடைகள் உள்ளன. குறிப்பாக மேலப்பாளையத்தில் மட்டும் 30 கடைகள் இருக்கின்றன.
கடைகளில் வைத்து ஆடுகள் வெட்டப்படும் போது அதில் உள்ள கழிவுகள் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் மேலப்பாளையத்தில் ஆடறுப்பு மனை அமைக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் இங்கு ஆடுகளை கொண்டு வந்து வெட்டி சீல் வைத்து அதன்பிறகுதான் கடைகளுக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்ய வேண்டும். இங்கு வெட்டப்படும் ஆடுகளுக்கு தலா ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெரும்பாலான வியாபாரிகள் ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லாமல் தங்களது கடைகளிலேயே வெட்டி விடுவதாக புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மேலப்பாளையத்தில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஆசாத் ரோட்டில் உள்ள காசிராஜன் என்பவரது கடையில் ஆடுகள் அங்கேயே அறுக்கப்பட்டு அதில் உள்ள கழிவுகள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்பட்டிருந்தன. மேலும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த இறைச்சியையும் வியாபாரத்திற்காக வைத்திருந்தனர்
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து கடையை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டனர். இதேபோல் சாயன்தரகன் தெருவில் அப்துல்லா என்பவருக்கு சொந்தமான கடையிலும் சோதனை நடத்தப்பட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தம் 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடந்தது. வியாபாரிகள் தங்களது ஆடுகளை ஆடறுப்பு மனைக்கு கொண்டு செல்லும் போது குத்தகைதாரர்கள் அந்த இறைச்சிக்கு சீல் வைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் ஆடுகளை அங்கு கொண்டு செல்லாமல் கடைகளிலேயே வெட்டி அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக தாங்கள் வைத்துள்ள போலி சீல் மூலம் முத்திரை குத்தி விடுகின்றனர்.
இன்று நடந்த சோதனையில் காசிராஜன், அப்துல்லா ஆகியோர் கடைகளில் இருந்த போலி சீல் மற்றும் பேடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.