தமிழிலேயே வாதாடி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாதனை
மதுரை: தமிழக உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் தமிழிலேயே வாதாடி புதிய சாதனை படைத்துள்ளனர்.
உயர்நீதிமன்ற விசாரணைகளின்போது தமிழிலேயே வாதாட அனுமதி தர வேண்டும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் பெயர்ப் பலகையை தமிழில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மதுரையில் வழக்கறிஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அவர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர்கள் தமிழிலேயே வாதாடின புதிய வரலாறு படைத்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடியது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், நாங்கள் என்ன வாதாடுகிறோம் என்பதை எங்களது கட்சிக்காரர்கள் இனிமேல் எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல மனு தாக்கல், தீர்ப்பின் நகல் ஆகியவற்றையும் தமிழிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் என்றனர்.
தமிழில் வாதாட அனுமதிக்கப்பட்டதையடுத்து வழக்கறிஞர்கள், கோர்ட்டுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளைக் கொடுத்து மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டனர்.