Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபை தேர்தலிலும் திமுக-காங் கூட்டணி வெல்லும்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறுதியாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியே பெரும் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:

கேள்வி: திமுக அரசை ஜெயலலிதா தொடர்ந்து மைனாரிட்டி அரசு என்று விமர்சித்து வருகிறாரே?

ஸ்டாலின்: 'மெஜாரிட்டி' இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும். கழக அரசை 'மைனாரிட்டி' அரசு என்று ஜெயலலிதா சொல்வது எந்த வகையிலும் பொருத்தம் இல்லை.

கேள்வி: சினிமா ஹீரோக்கள் அரசியலுக்கு வருவதை பற்றி உங்கள் கருத்து?

ஸ்டாலின்: எந்தத் துறையிலிருந்தும் அரசியலுக்கு வருவதையும் ஜனநாயகம் அனுமதிக்கிறது. ஆனால் ஷூட்டிங்கும் மார்க்கெட்டும் இல்லாத நிலையில் பொழுதுபோக்கிற்காக அரசியலுக்குள் நுழைந்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காண்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேள்வி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை திமுகவும்,அதிமுகவும் சேர்ந்து திட்டமிட்டு தோல்வியடைய வைத்தன என்று அதன் தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

ஸ்டாலின்: கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தபடிதான் கூட்டணி அமைத்தோம் என்றவர் ராமதாஸ். பாமக இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்று சொல்லி வந்தவர், திமுகவும் அதிமுகவும் கூட்டணி போட்டு தங்களைத் தோற்கடித்து விட்டதாக கற்பனை செய்ய முடியாத குற்றச்சாட்டைக் கூறுவது, அவர் விரக்தியின் விளிம்பிற்கே போய் விட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.

கேள்வி: 60 சதவீத மக்கள் இன்னும் வறுமையில் தான் வாழ்கிறார்கள், வளர்ச்சி இல்லை என்கிறாரே ராமதாஸ்?

ஸ்டாலின்: மற்ற மாநிலங்களைப் போல இங்கே பட்டினிச் சாவுகள் இல்லை. ஏழைகள் வீட்டு உலையில் ஒரு ரூபாய் அரிசி கொதிக்கிறது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உயர் மருத்துவ சிகிச்சை போன்ற திட்டங்களை 60 சதவீதத்திற்கும் அதிகமான தமிழக மக்கள் பெற்று வாழ்கிறார்கள்.

கேள்வி: காங்கிரசுடனான உங்கள் கூட்டணி உறவு எப்படி உள்ளது?

ஸ்டாலின்: உறுதியானதாக, நம்பிக்கை மிகுந்ததாக, மக்கள் நலனை மனதில் கொண்டதாக இந்தக் கூட்டணி தொடர்கிறது.

கேள்வி: உறவு வலுவாக இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?

ஸ்டாலின்: இந்தக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வலுவாக இருக்கிறது. அதனால் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும்போது இந்தக் கூட்டணியே வெற்றி பெறும்.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றிக்குப் பிறகு, 10 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது இது திமுகவின் பொற்காலமா?

ஸ்டாலின்: இது திமுகவின் பொற்காலம் என்பதை விட தமிழக மக்களின் பொற்காலம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்கள் வழங்கிய நற்சான்றிதழ்கள்தான் தேர்தல்களின் வெற்றிகள்.

கேள்வி: அதிமுக தலைவிக்கு கலைஞர் வீட்டு வசதித் திட்டம், புதிய தலைமைச் செயலக திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பி இருந்தீர்களே?

ஸ்டாலின்: இரு நிகழ்ச்சிகளுக்கும் அதிமுக தலைமையோ அவர்களின் பிரதிநிதிகளோ வரவில்லை கலைஞர் வீட்டு வசதித் திட்டத்திற்கான அழைப்பிதழுக்கு பதிலாக தனக்கு முக்கியமான பணி இருப்பதாக சொன்னார். விழா நாளில் அவர் கொடநாட்டில் ஓய்வில் இருந்தார். அவரைப் பொறுத்தவரை அதுதான் முக்கிய பணி போலும். கழகத்தைப் பொறுத்தவரை கழகத்தைப் பொறுத்தவரை யார் மீதும் விரோதம் பாராட்டாமல், ஆரோக்கியமான அரசியல்போக்கு நீடித்து நிலைப்பதற்கு அதிமுக ஒத்துழைக்க மறுக்கிறது.

கேள்வி: நீங்கள் யாரை சந்திக்க ஆசைப்படுகிறீர்கள்?

ஸ்டாலின்: ஆயுதப் புரட்சியால் வென்ற ஃபிடல் காஸ்ட்ரோவையும், அமைதிப் புரட்சியால் வென்ற நெல்சன் மண்டேலாவையும்.

அரசியலை விட்டு விலகத் தயார்-ஜெவுக்கு சவால்:

இதற்கிடையே ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக தான் சொன்னதை நிரூபிக்க வேண்டியது ஜெயலலிதாவின் கடமை. அவர் மட்டும் தான் சொன்னது சரி என்பதை நிரூபித்துக் காட்டி விட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

பென்னாகரம் திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து நேற்று ஸ்டாலின் 2வது நாளாக பிரசாரத்தை மேற்கொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், பென்னாகரம் தொகுதியில் ஜெயலலிதா அம்மையார் கடந்த 2 நாட்களாக கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் திமுக அரசு மீது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அவரது தவறான பொய் பிரசாரத்திற்கு மறுப்பு தெரிவித்து நானும் பேசியிருந்தேன்.

ஒகேனக்கல்லில் நடந்த பிரமாண்டமான விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பீடு முதலில் ரூ.1,333 கோடியாக இருந்தது. அதன் பிறகு இந்த திட்டதிற்கான திருத்திய மதிப்பீடு தொகை ரூ.1,938 கோடியாக உயர்ந்தது.

முதற்கட்டமாக மடம் என்ற கிராமத்தில் பிரமாண்டமான நீர்தேக்க தரைமட்ட தொட்டி கட்டுவதற்கான பணிகளை 2 மாதங்களுக்கு முன்பு நான் தொடங்கி வைத்தேன். தற்போது அந்த திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்படவே இல்லை என்று ஜெயலலிதா அம்மையார் திமுக ஆட்சியின் மீதும், முதல்வர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். திட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கும்போது எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, இரண்டு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா இப்படி கூறி தரத்தை தாழ்த்தி கொள்ளலாமா?

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். அதற்காக நாள், நேரம் குறிப்பிடுங்கள். மடம் கிராமத்திற்கு வாருங்கள். நானும் வருகிறேன். அங்கு திட்டப்பணிகள் நடைபெறவில்லை என்று நீங்கள் நிரூபித்தால் அரசியலை விட்டு ஒதுங்கி கொள்கிறேன். அவ்வாறு நிரூபிக்க தவறிவிட்டால் நீங்கள் அரசியலை விட்டு விலக தயாரா? என்று ஜெயலலிதா அம்மையாரை கேட்டிருந்தேன்.

இதை ஆணவத்தோடோ, அகங்காரத்தோடோ கேட்கவில்லை. பொறுமையோடும், அமைதியோடும் கேட்டுக்கொள்கிறேன். காரணம் இந்த பிரச்சனையில் அரசியல் இல்லை. இரண்டு மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை என்பதால் அவரை மடம் கிராமத்திற்கு வந்து திட்டப்பணிகளை பார்வையிடுமாறு அன்போடு அழைத்திருந்தேன்.

ஆனால் இன்று மாலை வரை அது தொடர்பான செய்தியையோ, அறிக்கையையோ அவர் வெளியிடவில்லை. தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் நேரம் இல்லாமல் கூட இருக்கலாம். இந்த ஊருக்கும், எனக்கு பின்னால் வந்து பிரசாரம் செய்ய இருக்கிறார். அப்போது கூட எனது கேள்விக்கு அவர் பதில் சொல்லலாம். அவர் பதில் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

மடம் கிராமத்திற்கு எந்த நாள், எந்த நேரத்தில் வருகிறேன் என்பதை அவர் செய்தியாக அனுப்பட்டும். ஏன் அவர் செய்தியாக கூட அனுப்ப வேண்டாம். பொதுக்கூட்டத்தில் பேசினாலே நான் வர தயாராக இருக்கிறேன்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்னதாகவே நிறைவேற்றியே தீருவோம். எனவே தி.மு.க. அரசு மீதும் கலைஞர் மீதும் ஜெயலலிதா அபாண்டமாக குற்றம்சாட்டி தெரிவித்த கருத்தை திரும்ப பெறவேண்டும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல. ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் வந்துவிட்டு மற்ற நேரத்தில் கொடநாடு, கொடநாடு என்று சிந்திக்கிறார். முதல்வர் கருணாநிதி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று சிந்திக்கிறார்.

இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கு ஆன தேர்தல் என்று ஜெயலலிதா பேசியுள்ளார். இது பொதுத்தேர்தல் அல்ல. இடைத்தேர்தல்தான் என்பதை இரண்டு முறை முதல்வராக இருந்த அவரால் இதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை.

மற்ற இடைத் தேர்தல்களுக்கு வராத முதல்வர் கருணாநிதி, இந்த இடைத் தேர்தலுக்கு வருகிறா என்று கூறுகிறார்கள். அதுபற்றி முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, பென்னாகரம் தொகுதி மக்களை நான் பார்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை பார்க்க விரும்புகிறார்கள். அந்த உரிமை உணர்வோடு பென்னாகரம் தொகுதிக்கு செல்கிறேன் என்று பதில் அளித்திருந்தார்.

இடைத் தேர்தலுக்கு அவர் வராமலேயே திமுக வேட்பாளர்கள் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். பென்னாகரம் தொகுதி தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வருகிறார். இதனால் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் பெறுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+