இந்திய ராணுவத்தில் மிளகாய் குண்டு அறிமுகம் செய்ய முடிவு

மிளகாயைக் கொண்டு குண்டுகளைத் தயாரிக்க பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளதாம். இதுதொடர்பாக விஞ்ஞானிகளுடன் ஆய்வையும் அது தொடங்கவுள்ளது.
கையெறி குண்டுகளில் மிளகாயைக் கலந்து அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்த பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை, பெரும் கலவரம், கலகம் போன்ற சம்பவங்களின்போது இந்த மிளகாய் குண்டு பயன்படுத்தப்படுமாம்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இதுகுறித்து டிஆர்டிஓ விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. இதுதொடர்பான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகவும் காரமான மிளகாய் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பூட் ஜோலகியா என்ற வகை மிளகாயைக் கொண்டு இந்த குண்டு தயாரிக்கப்படும் என்றார்.
டிஆர்டிஓவின் உயிரி அறிவியல் துறை இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான ஆர்.பி.ஸ்ரீவத்சவா கூறுகையில், இதுகுறித்து சோதனை ரீதியில் சிலவற்றை நாங்கள் செய்து பார்த்துள்ளோம். அது திருப்திகரமாக இருந்துள்ளது என்றார்.
பூட் ஜோலகியா என்பது கேப்சிகம் சைனீஸ் குடும்பத்தைச் சேர்ந்த மிளகாய் ஆகும். இது அஸ்ஸாமைச் சேர்ந்தது.
இதன் கார அளவு 10,01,304 ஸ்காவி்லி யூனிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மெக்சிகோவின் ரெட் சாவினா மிளகாயை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்த மிளகாய் குண்டு குறித்த ஆய்வுகள் பல்வேறு டிஆர்டிஓ ஆய்வகங்களில் நடந்து வருகிறதாம். மிகச் சிறந்த முறையில் மிகக் கடுமையான காரத்துடன் கூடியதாக இந்த குண்டு இருக்குமாம்.
இந்தக் குண்டு வெடித்துச் சிதறும்போது எதிரிக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். உயிர் போகாது, அதேசமயம், அவனால் செயல்படவே முடியாத அளவுக்கு முடக்கிப் போட்டு விடும் என்கிறார்கள் பாதுகாப்புத்துறையினர்.
இதே பூட் ஜோலகியாவை கண்ணீர்ப் புகை குண்டுகளிலும் தடவி கலவரத்தை அடக்கும் யோசனையும் பாதுகாப்புத்துறையிடம் உள்ளதாம். இதற்காக பேஸ்ட் வடிவிலும், பவுடர் வடிவிலும் இதைத் தயாரிக்கும் திட்டம் உள்ளதாம்.
இது மட்டுமல்லாமல் உயரமான பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு உடலில் உஷ்ணம் குறைந்து விடாமல் தடுக்க இந்த மிளகாயை அவர்களது உணவில் சேர்ப்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறதாம்.
தற்போது ஒரு கிலோ பூட் ஜோலக்கியாவின் விலை ரூ. 250 என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications