ஜெ., ஸ்டாலின், ராமதாஸைத் தொடர்ந்து கருணாநிதி காரிலும் போலீஸ் சோதனை

பென்னாகரத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தங்களது வாகனங்களை மட்டுமே போலீஸார் சோதனையிடுவதாகவும் திமுகவினரின் கார்களை நிறுத்துவதில்லை என்றும் பாமக குற்றம் சாட்டியது.
இதையடுத்து தற்போது அனைத்துக் கார்களையும், வாகனங்களையும் போலீஸார் சோதனைச் சாவடிகளில் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதியின் காரையும் நிறுத்தி நேற்று சோதனை போட்டுள்ளனர்.
பென்னாகரம் இடைத்தேர்தலை முன்னிட்டு, அங்கு பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக முதல்வர் கருணாநிதி, சென்னையில் இருந்து நேற்று காரில் புறப்பட்டு சென்றார். சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கருணாநிதியுடன் பிரசாரத்துக்கு சென்றார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வேலூர் கலெக்டர் ராஜேந்திரன், காஞ்சீபுரம் கலெக்டர் சந்தோஷ் மிஸ்ரா ஆகியோர் முதல்வர் கருணாநிதியை வரவேற்றார்கள்.
முதல்வரின் கார் பூட்டுக்காரன் தோப்பு சோதனைச் சாவடிக்கு வந்தபோது காரை நிறுத்தி சோதனை போட்டனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் வாகனத்தில் இருந்தனர். இந்த சோதனையால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
முதல் முறையாக...
முதல்வர் கருணாநிதியின் கார் தமிழகத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications