பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஸ்தம்பித்தது... பயணிகள் கோபம்!
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான பணியாளர்களின் 4 நாள் வேலை நிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விமானங்களையுமே நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நிர்வாகம்.
இதனால் பல ஆயிரம் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் 6 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் ஏற்றப்பட்ட பயணிகள் கடைசி நேரத்தில் இறக்கப்பட்டனர். காரணம் பணியாளர்கள் இல்லாததே.
உலகின் பல விமான நிலையங்களிலும் 70 சதவிகித தொலைதூர விமானங்களும், 55 சதவிகித குறுகிய தூர விமானங்களையும் ரத்து செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது நிர்வாகம். நாளை இன்னும் கூட கூடுதலாக விமானங்கள் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
சரியாக வார இறுதி நாளில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ட்ரைக் என்பதால் பயணிகள் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளனர். பல விமான நிலையங்களில் பயணிகளுக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
விமான ஊழியர்களின் இந்த ஸ்ட்ரைக்கை கண்டித்துள்ளார் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி வில்லி வால்ஷ். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த பத்து வருடங்களுக்குக் கூட இந்த நிறுவனம் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடும் என்றார் அவர்.
சம்பள பிரச்சினைகளைச் சரிசெய்யக் கோரி ஏற்கெனவே கடந்த வாரம் இந்நிறுவனத்தின் 12000 விமான பணியாளர்கள் 3 நாட்கள் ஸ்ட்ரைக் நடத்தினர். இந்த ஸ்ட்ரைக் நடந்து 5 நாட்களுக்குள் மீண்டும் 4 நாட்கள் ஸ்ட்ரைக் மேற்கொண்டுள்ளனர்.