திருவள்ளூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்
சென்னை: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வி.பழனிகுமார், அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, வருவாய் நிர்வாக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்-அமைச்சரின் சிறப்பு பிரிவின் தனி அதிகாரியாக பணியாற்றி வரும் டி.பி.ராஜேஷ், அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. மேலும், விடுமுறையில் சென்று திரும்பியுள்ள கோவை, வணிகவரி இணை ஆணையர் பி.ஏகாம்பரம், ஓய்வு பெற உள்ள எஸ்.அய்யருக்கு பதிலாக, கோவை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த சந்தீப் சக்சேனா, எஸ்.எஸ்.ஜவகருக்கு பதிலாக, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வகித்து வந்த தமிழ்நாடு மருத்துவ பணிகள் ஆணைய நிர்வாக இயக்குனர் பொறுப்பில் வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையாளராக பணிபுரிந்து வந்த டாக்டர் கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுமுறையில் சென்று திரும்பியுள்ள முன்னாள் இணை தலைமை தேர்தல் அதிகாரியும், பொதுத்துறை துணை செயலாளருமான (தேர்தல்) ஜெயஸ்ரீ முரளிதரன், மாநில தொழில் மேம்பாட்டுக்கழக செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவர் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவு இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு கழகத்தின் கூடுதல் கலெக்டரும் (மேம்பாடு) திட்ட அதிகாரியுமான டாக்டர் ஆர்.ஆனந்த குமார், அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, பி.ஏகாம்பரத்துக்கு பதிலாக, கோவை வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.பி.ராஜேஷ், டாக்டர் ஆர்.ஆனந்தகுமார் ஆகியோருக்கு பதிலாக நியமிக்கப்படுபவர்கள் பற்றிய விவரம் தனியாக அறிவிக்கப்படும் என அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications