இந்தியாவில் வறுமை கோடுக்கு கீழ் 31% முஸ்லிம்கள்: பொருளாதார ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவில் 31 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோடுக்கு கீழ் இருப்பதாக தேசிய பயன்பாட்டு பொருளியல் ஆய்வுக் குழு (என்.சி.ஏ.இ.ஆர்) நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.
முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர், மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரம்:
10 முஸ்லிம்களில் 3 பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ. 550க்கும் குறைவாகவே உள்ளது.
2004-05 ஆண்டு நிலவரப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற முஸ்லிம்களின் சராசரி தனி நபர் மாத வருமானம் ரூ.338.
நாட்டில் பழங்குடி மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களில் 32 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம்களில் 31 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
முஸ்லிம் சமுதாயத்தில் கல்வி ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் குறு மற்றும் குடிசைத் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே வருமானத்தை ஈட்டுகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13.8 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் ஆகும்.












Click it and Unblock the Notifications