விடுதலைச் சிறுத்தைகள் கொடிக் கம்பம் அகற்றம்-ஜி.கே. மணி மீது வழக்கு
சேலம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை நள்ளிரவில் அகற்றியது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கருங்கல்லூர் காந்தி நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் இருந்தது. இந்த கம்பம் நள்ளிரவில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொளத்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தமிழ்மணி போலீசில் புகார் செய்தார்.
அதில், பாமக தலைவர் ஜி.கே. மணியின் தூண்டுதலின் பேரில் கொளத்தூர் ஒன்றிய பாமக செயலாளர் மாரப்பன் தலைமையில் ஏழுமலை, குமார், ராஜா மற்றும் சிலர் இரவு நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றி சென்றதாக கூறியிருந்தார்.
இதையடுத்து கொளத்தூர் போலீஸார் ஜி.கே. மணி உள்பட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் கருங்கல்லூர் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications