Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் முடிவில் சதி என்கிறார் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ம.க.வும் இதுவரை கண்டிராத வகையில் பெருமளவில் பணத்தைக் கொட்டி, தி.மு.க. கடைபிடித்த அதே முறையைத் தான் கடைபிடித்துள்ளது. இது போன்ற குறுக்கு வழி செயற்கை வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை பேணி பாதுகாக்கும் வகையிலும், இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் உறுதியான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று இந்த நாடே எதிர்பார்க்கிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

தேர்தல் தோல்வி குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் போலீஸ் துறையின் துணையோடு வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாக்காளர்களை மிரட்டுவதுமான ஜனநாயக விரோதச் செயல்கள் தான் நடைபெற்று வருகின்றன.

பென்னாகரம் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினரால் பணம் தண்ணீர் போல வாரி இறைக்கப்பட்டது. வேட்டி, சேலை, பணம், மதுபானம், மூக்குத்தி, கறி விருந்து, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, சமையல் காஸ் சிலிண்டர், கிரைண்டர் என அனைத்தும் வாக்காளர்களுக்கும் வெளிப்படையாகவே கொடுக்கப்பட்டன.

தமிழக அரசின் காவல் துறையை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்தக் கூடாது என்று அ.தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தியும், அதை இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க.வினர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் தி.மு.க.வினரின் அராஜகங்களை இந்திய தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை.

பென்னாகரம் இடைத்தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு பெரிய சவாலாக உள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்ததில் இருந்தும், இது குறித்து தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்ததில் இருந்தும், இந்த இடைத் தேர்தலில் எந்த அளவுக்கு அராஜகம் நடைபெற்றிருக்கும் என்பதை தமிழக மக்கள் எளிதில் யூகித்துக் கொள்ளலாம்.

2009-ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், காங்கிரசிற்கு வேண்டிய தொலைக்காட்சி, தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தேர்தல் முடிவு வெளியாவதற்கு முந்தைய நாள் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டது. கடைசியில் அது தான் நடந்தது.

இதே போன்று, இந்த இடைத்தேர்தலிலும் மிகப் பெரிய சதி நடந்திருப்பது தெளிவாகிறது.

தி.மு.க.விற்கு கிடைத்துள்ள இந்த வெற்றி பண பலம், படை பலம், அதிகார பலத்தின் மூலமாக பெறப்பட்ட செயற்கையான வெற்றி. ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தோல்வி.

இந்த இடைத்தேர்தலில் பா.ம.க.வும் இதுவரை கண்டிராத வகையில் பெருமளவில் பணத்தைக் கொட்டி, தி.மு.க. கடைபிடித்த அதே முறையைத் தான் கடைபிடித்துள்ளது. எதையுமே கண்டுகொள்ளாத இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையைப் பார்க்கும் போது, ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி தான் எழுகிறது.

இது போன்ற குறுக்கு வழி செயற்கை வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை பேணி பாதுகாக்கும் வகையிலும், இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் உறுதியான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று இந்த நாடே எதிர்பார்க்கிறது. ஆனால், அத்தகைய நடவடிக்கை எடுக்கும் சக்தியை இந்திய தேர்தல் ஆணையம் இழந்துவிட்டதா என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.

தி.மு.க.வினரின் தீவிரவாத, அராஜக செயல்களுக்கு இடம் கொடுக்காமல் எனது வேண்டுகோளினை ஏற்று, அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்; கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பணியில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், என் உடன்பிறப்புகளுக்கும்; கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தோழமை கட்சிகளைச் சார்ந்த தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், ஆதரவு நல்கிய இதர அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+