அதிமுக தோல்வி – விஷமருந்திய தொண்டர் பலி – ஜெ. வேதனை
சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தல் தோல்வியால் வேதனை அடைந்த அதிமுக தொண்டர் ஒருவர் வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தேர்தல் தோல்வியால் மனம் உடைந்து உயிரை மாய்க்கும் செயல்களில் அதிமுகவினர் ஈடுபடக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயல்லிதா விடுத்துள்ள அறிக்கை:
நடந்து முடிந்த பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. செயற்கையாக வெற்றி பெற்று விட்டதை தாங்கிக் கொள்ள முடியாத, வேலூர் மேற்கு மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், இடையன்பள்ளம் கிளை கழக செயலாளர் பி.குமார் விஷம் அருந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.
தி.மு.க.விற்கு தற்போது கிடைத்துள்ள வெற்றி உண்மையானது அல்ல; நமக்கு தோல்வியும் அல்ல, எனவே, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்ற; வருத்திக் கொள்கின்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அன்பு கட்டளை இடுகிறேன்.
குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலும், அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.