பள்ளிக் கட்டிடங்கள் தகர்ப்பு: மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மாவோயிஸ்டுகள்!
பாட்னா: பீகாரில் பள்ளிக் கட்டிங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மாணவர்களிடம் மாவோயிஸ்டுகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
பீகாரில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நடத்தி வந்த காவல் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மெல்ல மெல்ல ரயில் பாதைகள் மற்றும் மொபைல் டவர்கள் என விரிவடைந்தது.
தற்போது பள்ளிக் கட்டிடங்களையும் நக்சல்கள் குறி வைத்து தாக்குவதாக போலீசார் கூறி வந்தனர். மத்திய பாதுகாப்புப் படையினர் இந்த பள்ளிக் கட்டிடங்களை முகாமாக பயன்படுத்துவதாக எண்ணி இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிகிறது.
பீகாரில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும், ஒளரங்காபாத், கயா, ரோட்டாஸ், ஜெகனாபாத் ஆகிய மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டிடங்களை தாக்கி அழித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதனால், ஒளரங்காபாத் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சார்பில் மாவோயிஸ்டுகளுக்கு உருக்கமான கடிதம் கடந்த டிசம்பர் மாதம் எழுதப்பட்டது.
அதில், 'மாவோயிஸ்ட் அங்கிள், நாங்கள் என்ன பாவம் செய்தோம். போலீசாருடனும், உங்கள் எதிரிகளுடனும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சண்டை போடுங்கள். நாங்கள் கல்வி கற்பதற்கு இடைஞசல் செய்கிறீர்களே, இது நியாயமா?' எனக் கேள்வி கேட்டு எழுதப்பட்டது.
ஆனாலும் கடந்த வாரத்தில் கூட பீகாரின் கைமூர் மற்றும் ரோட்டாஸ் மாவட்டத்தில் ஐந்து பள்ளிக் கட்டிடங்களை மாவோயிஸ்டுகள் தகர்த்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து மாவோயிஸ்டுகள் சார்பில் 'பிட் நோட்டீஸு'கள் பள்ளி மாணவர்கள் மத்தியில் தற்போது வினியோகித்து வருகின்றனர்.
அதில், பள்ளிக் கட்டிடங்களை சேதப்படுத்தி கல்விக்கு இடையூறாக இருப்பதற்கு மிகவும் வருந்துவதாக மாவோயிஸ்ட்கள் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மேலும், 'பள்ளி கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தும் நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள் என பலமுறை போலீசாரிடம் வற்ப்புறுத்தினோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
வேறு வழியில்லாமல் நாங்கள் இப்படி செய்ய வேண்டியிருக்கிறது. உண்மையில் நாங்கள் நாட்டின் நலனுக்காகத்தான் போராடி வருகிறோம்.
இந்திய அரசாங்கத்துக்கு பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங்கும், உள்துறை அமைச்சராக இருக்கும் சிதம்பரமும் வனப் பகுதிகளை வெளிநாட்டு தனியார்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மண்ணின் மைந்தர்களுக்கு அவர்கள் மிகப் பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம்.
எங்கள் நடவடிக்கையின் மூலம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை எண்ணி மிகவும் வருந்துகிறோம். எங்களை இவ்வாறு செய்ய போலீசார் தான் தூண்டுகிறார்கள்.
ஆனால் ஒன்றை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அரசாங்கம் எங்களை ஒடுக்கப்போவதாகக் கூறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு அங்கமாக, உங்களின் பள்ளிக ளை எல்லாம், பாதுகாப்புப் படையினர் தங்களின் முகாமாக மாற்றிக் கொள்ளப் போகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications