ரூ.42 லட்சம் ஹவாலா பணத்துடன் கடலூரில் 5 பேர் கைது!
கடலூர்: ரூ.42 லட்சம் பணத்தை மடியில் மறைத்து வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த 5 பேர் கடலூரில் போலீசாரிடம் பிடிபட்டனர்.
கடலூரில் நேற்று இரவு போலீசார் நடத்திய சோதனையில் கத்தை, கத்தையாக ரூ.42 லட்சம் ஹவாலா பணம் பிடிபட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 2 பேர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 5 பேரை போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் மடியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை ஏராளமாக வைத்திருந்தை போலீசார் பார்த்தனர்.
விவரம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். ஐந்து பேரையும் திருப்பாதிப்புலியூர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் நாகை மாவட்டம் திட்டச்சேரி நடுத்தெருவை சேர்ந்த அல்பைசல் (32), திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர், ஆர்.வி.புரத்தை சேர்ந்த அஷ்ரப்அலி (54), சென்னையைச் சேர்ந்த ஈஸ்வர் (42), சகுபர் சாதீக் (44), கன்னியாகுமரி ஜாகீர் உசேன் (39) என தெரியவந்தது.
இவர்கள் ஐந்து பேரும் மொத்தம் ரூ.42 லட்சம் அளவுக்கு பணக்கட்டுகளை மடியில் மறைத்து வைத்திருந்தனர். இவை கள்ளநோட்டுகளும் அல்ல.
இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது, பணத்தை கொடுத்தது யார், எதற்காக கொடுத்தார்கள் போன்ற விவரங்களை ஐந்து பேரும் முதல்கட்ட விசாரணையில் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.
எனவே, 5 பேர் மீதும் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 41 மற்றும் 102ன் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் உள்ள மத்திய அமலாக்க பிரிவுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு போலீசார், பிடிபட்டவர்களிடம் அடுத்தகட்ட விசாரணையை தொடங்குவார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications