சோனியாவுக்குப் பயந்தே நளினியை விடுவிக்கவில்லை கருணாநிதி - பழ.நெடுமாறன்
திண்டுக்கல்: நளினி மற்றும் முருகனை விடுதலை செய்தால் சோனியா காந்தியின் அதிருப்திக்கு ஆளாகிவிடுவோம் என்று கருதியே அவர்களை விடுதலை செய்ய கருணாநிதி தயங்குகிறார் என்று தமிழர் தேசிய கட்சி தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், நளினியும், முருகனும் கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இவர்களில் பலர் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள்.
ஆனால் நளினியை விடுதலை செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என அரசு பொய்யான ஒரு தகவலை நீதி மன்றத்திலேயே கூறுகிறது.
அரசியல் சட்டப்படி, தண்டனைக்குரியவர்களை விடுவிப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் அதிருப்திக்கு ஆளாகி விடுவோம் என்ற கவலையால் தான், நளினியை விடுதலை செய்ய கருணாநிதி மறுக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications