குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மண்ணில் புதைந்ததால் கோவையில் பரபரப்பு!
கோவை: குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் 2 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களின் அடிப்பகுதி மண்ணில் புதைந்து ஒரு பக்கமாக சாய்ந்து நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை அம்மன்குளம் பகுதியில் ரூ.49 கோடி செலவில் ஆயிரத்து 608 வீடுகள் கட்ட குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டது.
முதல்கட்டமாக 936 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நீர்நிலையை ஒட்டிய பகுதி என்பதால் மண் பரிசோதனை எல்லாம் நடத்தப்பட்ட பின்னரே கட்டிடம் எழுப்பப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை திடீரென்று 2 பிளாக் கட்டிடங்கள் மண்ணில் புதைந்த நிலையில் சாயத்தொடங்கின. கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியில் பகுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்கள்.
இதுபோன்ற ஆபத்தான கட்டிடங்களில் தங்களை குடியமர்த்தக்கூடாது என்றும், இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும், கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கட்டிடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், ஜவஹர்லால் நேரு நகரபுனரமைப்பு திட்டத்தின்படி, தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த கட்டிட பணிகள் நடைபெற்றன.
சரிந்த நிலையில் உள்ள கட்டிடத்தை ஆய்வு செய்து, இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக இதுபோன்ற அடுக்குமாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என்றார்.
சாய்ந்து விழும் நிலையில் உள்ள இந்த 2 கட்டிடங்களின் மதிப்பு ரூ.2 கோடியே 40 லட்சம்.












Click it and Unblock the Notifications