சங்கரன்கோவில் கல்யாண வீட்டில் ரூ. 1 லட்சம் திருட்டு- பெண் கைது
சங்கரன்கோவில் திருமண மண்டபத்தில் ரூ.1 லட்சம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டது.
சென்னை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது தங்கைக்கு கடந்த மாதம் 18ம் தேதி சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் வைத்து திருணம் நடந்தது. பின்னர் கோயில் முன் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் மற்ற சடங்குகள் நடந்தன.
திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் கொடுத்த மொய்பணம் ஒரு பையில் வைக்கப்பட்டு இருந்தது. திடீரென்று பணம் வைத்திருந்த பை காணாமல் போனது. அதில் சுமார் ரூ.1 லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வேலாயுதம் சங்கரன்கோவில் நகர போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை போலீசார் பார்த்தனர். அதில் திருமண வீ்ட்டிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு பெண் மண்டபத்தில் அங்கும் இங்கும் உலாவியதை கண்டுபிடித்தனர். போலீசார் அந்த பெண் குறித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சங்கரன்கோவில் சங்கர்நகர் 2வது தெருவை சேர்ந்த சகுந்தலா என்பது தெரிய வந்தது. போலீசார் சகுந்தலாவை பிடித்து விசாரித்தபோது மொய் பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மொய் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.