சிங்கள வீரர் ஜெயசூர்யா வருகையைக் கண்டித்து புதிய தமிழகம் கருப்புக் கொடி- 18 பேர் கைது
சென்னை: ராஜபக்சே கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா சென்னைக்கு வருவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம நடத்தினர். ஆனால் அவர்களது போராட்டத்திற்கு முன்பே ஜெயசூர்யா ரகசியமாக சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்.
இந்தக் குழப்பம் காரணமாக விமானம் மூலம் வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தமிழகம் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி குழப்பமாகி விட்டது.
போராட்டம் குறித்து முன்பே அறிந்திருந்த ஜெயசூர்யா மிகவும் ரகசியமான முறையில் சென்னைக்குள் நுழைந்து விட்டார். நேற்று காலையிலேயே கொழும்பிலிருநது நேரடியாக சென்னைக்கு வந்த அவர் படு ரகசியமான முறையில் விமான நிலையத்தைத விட்டு அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்.
அதை அறியாத புதிய தமிழகம் கட்சியினர் விமான நிலையத்தில் கூடி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியினர் அங்கு வந்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் குறுக்கிட்டு கருப்புக் கொடி காட்டிய 18 பேரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், ஜெயசூர்யா, இனவெறி பிடித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர். அவரது கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஒரு கிரிக்கெட் வீரராக பார்க்கக் கூடாது. இனவெறிப் படுகொலைக்குத் துணை போகும் நபராகவே பார்க்க வேண்டும் என்றார்.
இன்று சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை அணியில் ஜெயசூர்யா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications