சட்டசபையில் பெரும் அமளி – அதிமுக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

இன்று காலை சட்டசபை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்த்து. அப்போது திமுக உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் பேசிய கருத்துக்களைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் ஹரி மற்றும் அருண்மொழித்தேவன் ஆகியோர் கோஷம் எழுப்பினர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர்.
அதிமுக உறுப்பினர்கள் இருவரையும் அமைதியாக அமருமாறு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து காரசாரமாக கோஷமிட்டதால் அவர்களை அவையிலிருந்து வெளியேறேற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர்.
இதையடுத்து இரு உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து பிற அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் சபைக்குத் திரும்பி வந்தனர். வந்த வேகத்தில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் இறங்கினர்.
இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார் சபாநாயகர் ஆவுடையப்பன்.
அதிமுகவினரின் செயலைக் கண்டித்து அவர்கள் அனைவரும் வருகிற 9ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications