தமிழகத்தில் தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை! - அதிமுக
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முன்பு மின்துறை அமைச்சர் அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவுக்கு உற்பத்தியை பெருக்குவோம் என்றார். தமிழ்நாட்டு மக்களுக்கே ஒழுங்காக மின்சாரம் கொடுக்க முடியாதபோது எப்படி பக்கத்து மாநிலங்களுக்கு கொடுக்கப் போகிறார்.
புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த மண்ணிலே பிறந்தவர்களுக்கு கொடுக்காத சலுகைகள் கூட எங்கிருந்தோ வந்து தொழில் தொடங்குவோருக்கு வழங்கப்படுவதாக பேசப்படுகிறது. இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அறக்கட்டளை எதற்கு அறக்கட்டளை?
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் பென்னாகரம் இடைத்தேர்தல் வருவது தெரிந்ததும் வேலை தொடங்கப்பட்டு விட்டதாக வேடிக்கை காட்டுகிறீர்கள். தேர்தல் முடிந்த பிறகு ஏமாற்றம் தொடர்கிறது. கூவத்தை சீரமைப்பதற்காக சென்னை நதிநீர் அறக்கட்டளை அமைக்கப்படும் என்று அறிவித்தீர்கள். அரசு அறிவிக்கும் திட்டம் அரசு மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும். ஒருவேளை சீர்படுத்த முடியாது போனால் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைத்து அறக்கட்டளை தொடங்கப் போகிறீர்களா?
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் இப்போது அராஜக பூமியாக மாறிவிட்டது. தினமும் கொலை, கொள்ளை. குற்றங்கள் குறைவதற்கு பதில் கூடிக்கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்த பிறகு தான் திருட்டு வி.சி.டி. வரும். ஆனால் இப்பொழுது படம் வெளிவருவதற்கு முன்பாகவே வந்துவிடுகிறது. அந்தப் பெருமை உங்கள் ஆட்சிக்குத்தான்.
பர்சில் பணம் இல்லாதவன் பசுமாட்டை விலைபேசியது போல் கஜானாவில் பணம் இல்லாமல் இலவசங்களை அறிவித்துக் கொண்டிருப்பது அறிவு சார்ந்தவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது...." என்றார் பன்னீர் செல்வம்.