தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் யூலிப் திட்டத்துக்கு உடனடி தடை! - செபி அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இனி எந்த தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் யூலிப் பாலிஸியை விற்கக் கூடாது. இந்தத் தடை உத்தரவு அரசு நிறுவனமான எல்ஐஸியைக் கட்டுப்படுத்தாது.
காப்பீடு நிறுவனங்கள் யூலிப் என்று அழைக்கப்படும் யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற திட்டத்தை அறிவிக்கின்றன.
இதன்படி காப்பீடு பாலிஸிதாரர்கள் செலுத்தும் பிரிமியம் தவணை தொகையில், காப்பீடு கட்டணம் தவிர மீதமுள்ளவை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். எந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதைக் கூட பாலிஸிதாரர் தேர்வு செய்ய முடியும்.
பங்குச் சந்தை முதலீட்டில் இலாபம் கிடைத்தால் அது பாலிஸிதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். இதில் நஷ்டம் அடைவதற்கும் வாய்ப்பு உண்டு. அப்போது பாலிஸிதாரர் இழப்பை ஏற்க வேண்டும். கிட்டத்தட்ட பங்குச் சந்தை சூதாட்டம் போலத்தான் இதுவும்.
இன்றைய சூழலில், பெரும்பாலான தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 70 சதவிகித பிரிமியத் தொகை இந்த யூலிப் பாலிஸி மூலமே கிடைக்கிறது.
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் யூலிப்பை மட்டுமே நம்ப ஆரம்பித்து, வரைமுறையின்றி வசூலில் இறங்கின. இதனால் பரஸ்பர நிதி நிறுவனங்களின் வர்த்தகம் கடுமையாத வீழ்ச்சியடைந்தது. காரணம், அதற்கு முன்பு வரை யூலிப் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியவை பரஸ்பர நிதி நிறுவனங்கள்தான்.
யூலிப் திட்டத்தை தீவிரமாக சந்தைப்படுத்திய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான முன் அனுமதியை செபியிடம் பெறவே இல்லை என்பது முக்கியமானது. இதனால் கடுப்படைந்த செபி, கடந்த ஜனவரியில் அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியது. இப்போது முழுமையாகத் தடை செய்துள்ளது.
செபியின் இந்த தடை உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இதனால் ஆடிப் போயுள்ளன. அதே நேரம் தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ளவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிட உள்ளது செபி.