ஜெர்மன் எம்.பிக்களின் அவதூறுப் பேச்சு- நடவடிக்கை கோரி பிரதமருக்கு மோடி கடிதம்
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மோடி எழுதியுள்ள கடித்த்தில் கூறியுள்ளதாவது...
ஜெர்மனி நாட்டு எம்.பிக்கள் குழு ஒரே ஒரு நாள் அகமதாபாத் நகருக்கு வருகை தந்து, அந்த வருகையின் இறுதியில், குஜராத்தில் சட்டம் முடங்கிப் போய் விட்டது, மனித உரிமை மீறல்களில் நான் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
2002ம் ஆண்டு நடந்த குஜராத் வன்முறைச் சம்பவம் குறித்து ஒரே நாளில் இந்தக் குழு எப்படி ஒரு ஆய்வு முடிவுக்கு வந்த்து என்று தெரியவில்லை.
எனது பெயருக்கு அவர்கள் அவதூறு இழைத்துள்ளதன் மூலம் குஜராத் மாநிலத்திற்கும், இந்த நாட்டுக்கும் அவர்கள் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர்.
என்னை மிகவும் அவதூறாக அவர்கள் விமர்சித்தள்ளனர். இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு. ஏற்கவே முடியாத மிகப் பெரிய அவதூறு.
ஜெர்மன் எம்.பிக்கள் குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஜெர்மன் தூதருடன் இந்திய அரசு பேச வேண்டும். பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஜெர்மன் தூதரிடம் பேசி விளக்கம் கேட்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு குறித்து அவதூறான முறையில் செய்திகளைப் பரப்ப இந்திய ஊடகங்களை ஜெர்மனி தூதுக்குழு பயன்படுத்தியிருப்பது மிகவும் மோசமான செயல் என்று கூறியுள்ளார் மோடி.