ஆட்டோமொபைல் உற்பத்தியில் உலகில் நம்பர் 2 இந்தியாதான்!
உலகமெங்கும் கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றன. சில தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. ஆனால் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படுவதோடு, விற்பனையும் பெருமளவு அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு அளித்து வரும் பல்வேறு நிதிச் சலுகைகளே. கார் உற்பத்தி மற்றும் விற்பனை மட்டுமல்லாது, இதர மோட்டார் வாகன உற்பத்தியிலும் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா.
இதுகுறித்து SIAM அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, கார்கள், பலநோக்கு பயன்பாட்டு வாகனங்கள், கனரக வாகனங்கள் தயாரிப்பில் 42 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது சீனா. அதற்கு அடுத்த இடத்திலிருப்பது இந்தியாதான். கடந்த ஆண்டு, 27 சதவிகித வளர்ச்சியை இந்தத் துறையில் பெற்றுள்ளது இந்தியா. ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்றவை கூட இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளன.
இலகு ரக வாகன விற்பனையைப் பொறுத்தவரை உலகில் முன்னணி வகிப்பது இந்தியாதானாம். 25 சதவிகித வளர்ச்சியை இதில் எட்டியுள்ளதாம் இந்தியா.
ஜெர்மனி (23), பிரேசில் (11), பிரான்ஸ் (11), இத்தாலி (-0.2), பிரிட்டன் (-6), ஜப்பான் (-9), யுஎஸ் (-21) மற்றும் ரஷ்யா (-50) ஆகிய நாடுகளில் மோட்டார் வாகன சந்தை வளர்ச்சியை காட்டிலும் இந்தியா அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவை விட அதிக வளர்ச்சியை சந்தித்த நாடு சீனா மட்டுமே. சீனாவில் கடந்த நிதியாண்டு காலத்தில் மோட்டார் வாகன சந்தை 42 விழுக்காடு உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் அங்கு வாகன வரி 50 விழுக்காடு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.