சேவாபாரதி அலுவலகத்தில் தீவைப்பு - குளச்சலில் பரபரப்பு
குளச்சல்: குளச்சலில் சேவாபாரதி அலுவலகத்தின் முகப்புப் பகுதி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
குளச்சல், சீம்பிளிவிளையில் சிவதனுசு என்ற பெயரில் சேவாபாரதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இலவச கம்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி, மருத்துவ முகாம்கள், ஓவிய பயிற்சி, சுயஉதவி குழுக்களுக்கான பயிற்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் சேவாபாரதி அலுவலகத்தின் முன்பக்க கதவு மற்றும் அலுவலகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவற்றை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததுடன் அலுவலகத்தின் மேல் கல்வீசி தாக்கியுள்ளனர்.
அலுவலகத்தின் உள்பகுதியில் தூங்கி கொண்டிருந்த சிவபெருமாள் என்பவர் சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது முன்பக்க கதவு தீபிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த அசோக் குமார் என்பவர் அலுவலகத்தின் மு்ன் நிறுத்தி வைத்திருந்த பைக் எரிந்து கொண்டிருந்ததை பார்த்தார்.
குடிநீர் வால்வுகளை திறப்பதற்காக அவ்வழியே சென்ற குளச்சல் நகராட்சி ஊழியர்கள் தீவைப்பு சம்பவத்தை அறிந்து குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏடிஎஸ்பி பெருமாள் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை நெல்லை சரக டிஐஜி சண்முகராஜேஸ்வரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
எரிந்து நாசமான பைக்கை போலீசார் கைப்பற்றி குளச்சல் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.
சேவாபாரதி அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம் அறிந்த பாஜ மூத்த தலைவர் காந்தி தலைமையில் சேவாபாரதி அலுவலகத்தில் இருந்து குளச்சல் அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்று குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குளச்சல் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் எஸ்பி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications