அமெரிக்கா, பிரேசிலில் 8 நாள் பயணம்- புறப்பட்டார் பிரதமர்
டெல்லி: 8 நாள் அமெரிக்கா மற்றும் பிரேசில் பயணத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கினார்.
அமெரிக்காவில் நான்கு நாட்கள் தங்கும் பிரதமர், அங்கு நடைபெறும் அணு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். அதேபோல பிரேசிலில் பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா கூட்டமைப்பின் (பிரிக்) மாநாட்டிலும், இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா (இப்சா) மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.
முதலில் அமெரிக்கா செல்லும் பிரதமர் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருப்பார். இதில் 2 நாட்கள் அணு பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
ஒபாமாவின் முயற்சியால் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தீவிரவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் போகும் அபாயங்கள் குறித்தும், அணு பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. சில நாடுகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
உலக அளவில் அணு நிலையங்களையும், அணுப் பொருட்களையும் பாதுகாப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
அமெரிக்கப் பயணத்தின்போது அதிபர் ஒபாமா மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களை தனித் தனியாக சந்திக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்கிறார் பிரதமர்.












Click it and Unblock the Notifications