சென்னை வந்தாதர் பாஜக தலைவர் நிதின் கத்காரி
சென்னை: பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று சென்னை க்கு வந்தார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.
சமீபத்தில் பாஜக தலைவராகப் பொறுப்பேற்றார் நிதின் கத்காரி. அதன் பின்னர் இன்று தனது முதல் தமிழக விஜயத்தை மேற்கொண்டார்.
இன்று முற்பகல் சென்னை வந்த கத்காரியை, விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கத்காரி பேசுகையில், சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
பின்னர் அவர் பாஜக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று மாலை மயிலை மாங்கொல்லையில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் கத்காரி. முன்னதாக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார்.
நாளை காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் கத்காரி. காலை 8 மணிக்கு சேத்துப்பட்டில உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வரும் கத்காரி அங்கு மாவட்ட பாஜக தலைவர்கள் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் பிற்பகலில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.
இதையடுத்து மாலை 3 மணிக்கு பாஜக கிளைக் கமிட்டித் தலைவர்களை அண்ணா நகர் விஜயஸ்ரீ மஹாலில் சந்திக்கிறார்.
மாலை 4 மணிக்கு அயனாவரத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் பேசுகிறார். அதன் பின்னர் 5 மணியளவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலித் குடிசைப் பகுதிக்குச் செல்லும் கத்காரி அங்கு குடியிருக்கும் தலிக் மக்களை சந்தித்துப் பேசுகிறார்.