கத்திரிக்கு முன்பே பொசுக்கும் வெயில் – பெரும் புழுக்கத்தில் மக்கள்

நாடு முழுவதும் கொளுத்தும் வெயிலுக்கு மக்கள் பெரும் அவஸ்தையை அனுபவித்து வருகின்றனர்.
டெல்லியில் நேற்று வழக்கத்தையும் விட ஐந்து டிகிரி கூடுதலாக வெப்பம் நிலவியது. குறைந்தபட்ட வெப்பநிலை 40.5 டிகிரியாக இருந்தது.
கொல்கத்தாவிலும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் வெயிலின் வெப்பம் 41 டிகிரி அளவை தாண்டியிருந்தது. புருலியா, மேற்கு மிட்னாப்பூர், பான்குரா ஆகிய மாவட்டங்களில் சூரியன் கடுமையாக சுட்டெரித்தது.
ஒரிசாவின் மேற்கே உள்ள ஜார்சுகுடா பகுதியில் நேற்றைய தினம் நாட்டிலேயே அதிக அளவில் 45 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்தது.
ஒரிசாவில் மட்டும் வெயில் தாங்க முடியாமல் 28 பேர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்திலும் கடும் உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. இம்மாநிலத்தில் மிகுந்த உஷ்ண பூமியாக கருதப்படும் சுரு பகுதியில் நேற்று வெப்ப நிலை 43.3 டிகிரி பதிவாகியிருந்தது.
வடக்கே உள்ள மலைப் பிரதேசங்களும் சூரியனின் உக்கிரத்தில் இருந்து தப்பவில்லை.
உத்தரகண்ட்டில் டேராடூனில் கூட வழக்கத்தை விட நான்கு டிகிர் கூடுதலாகி 38.3 டிகிரியாக வெப்பம் தகித்தது.
சூட்டை தணிக்க மக்கள் நாடிச் செல்லும் சிம்லாவிலேயே நேற்றைய வெப்ப நிலை 27 டிகிரியாக பதிவாகி இருந்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் 36.8 டிகிரியும், பஞ்சாப் ஹரியானாவில் 42 டிகிரியும் வெப்பம் நிலவியது. சண்டிகரில் இதுவரை இல்லாத அளவு 39 டிகிரி வெந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் பல நகரங்களில் 100 டிகிரி
தமிழகத்திலும் குறிப்பாக வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. வேலூரில் நேற்று 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாக்கியது.
சென்னையில் நேற்றைய வெயிலின் அளவு சென்னையில் 36 டிகிரி செல்சியஸாக இருந்த்து.
வரும் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.
ஆனால் அதற்குள்ளாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற ஊர்களில் தினசரி மின் தடை வேறு ஏற்படுவதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழியின்றி பெரும் கொடுமைகளை அனுபவிக்க நேர்வதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி வரை வெயிலின் கடுமை மெல்ல மெல்ல அதிகரிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வேலை நேரத்தை மாற்றும் கேரளா
கேரளாவில் வெயிலின் தாக்கத்தை தாங்கமுடியாமல் பல்வேறு பணிகளின் வேலை நேரத்தையே மாநில அரசு மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளது.
வெயில் கொடுமையால் கால்நடைகள் மற்றும் பணியாளர்கள் பலியாவதை கருத்தில் கொண்டு, சாலை பராமரிப்பு, விவசாயப் பணிகள் தொடர்பான வேலைகளின் நேரத்தை மாற்றி அமைத்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் தேவைக்கேற்ற மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக பாலக்காடு மாவட்டத்தில் வெப்ப கால நோய் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் உச்ச அளவிலேயே இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆலப்பழா மட்டும் 33 டிகிரி செல்சியஸ் அளவோடு சற்று தப்பித்துள்ளது. ஆனால் இந்த அளவும் இதற்கு முந்தைய நிலையை காட்டிலும் கூடுதல் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications