யூலிப் திட்டங்களுக்கான தடையை விலக்கிக் கொள்ள செபி முடிவு

கடந்த வாரம் 14 நிறுவனங்களின் வெளியீடுகளுக்கு செபி தடை விதித்தது.
எஸ்பிஐ லைப், ஐசிஐசிஐ புரூடெண்ஷியல், டாடா ஏஐஜி உள்ளிட்ட 14 நிறுவனங்கள் பங்குச் சந்தை முதலீட்டுடன் இணைந்த முதலீட்டுத் திட்டத்துக்கு பொதுமக்களிடம் நிதி திரட்ட செபி தடை விதித்துள்ளது. இந்த தடை சனிக்கிழமை இரவு முதல் அமல்படுத்தப்படுவதாக செபி தெரிவித்தது.
தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் செபி மற்றும் காப்பீடு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (ஐஆர்டிஏ) மேல் முறையீடு செய்தன.
அரசு தலையீடு...
இந்த விவகாரத்தால் பங்குச் சந்தையில் புள்ளிகள் சரிவைச் சந்தித்தன. இதையடுத்து இந்த விஷயத்தில் நிதி அமைச்சகம் தலையிட்டு, தற்போதைய நிலை நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. இதையடுத்து தடையை விலக்கிக் கொள்ள செபி முன்வந்துள்ளது.
முன்னதாக, இதுபோன்ற சந்தை முதலீட்டுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் முன்பு செபி-யிடம் அனுமதி பெறாதது ஏன்? என்று விளக்கம் கேட்டு இந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நீதிமன்றம் போகிறது விவகாரம்...
இந்த முதலீட்டுத் திட்டங்களின்மொத்த மதிப்பு ரூ. 90,645 கோடியாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஐஆர்டிஏ மற்றும் செபி அமைப்புகள் தங்களது பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றம் செல்வதென தீர்மானித்துள்ளன.
செபி தலைவர் சி.பி. பாவே மற்றும் ஐஆர்டிஏ தலைவர் ஜே. ஹரிநாராயண் ஆகியோர் திங்கள்கிழமை தில்லியில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது இரு அமைப்புகளும் தங்களது பிரச்னைகளை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications