மகளிர் மசோதாவை நிறைவேற்ற ஜெயலலிதா வலியுறுத்தல்
சென்னை: வரும் மக்களவை கூட்டத்தொடரிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து கடந்த பதினைந்து ஆண்டு காலமாக பேசப்பட்டு வந்தாலும், 1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை துவக்கியபோது உருவாக்கப்பட்ட கொள்கை விளக்கத்திலேயே, நாடாளுமன்ற, சட்டப்பேரவை அமைப்புகளில் குறைந்தது 25 சதவீத இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு வழங்கவும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பங்கு பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
பொதுச் செயலாளராக நான் பொறுப்பேற்ற பின்னர் அதிமுக அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
1991ல் முதன் முதலாக நான் ஆட்சி அமைத்த போது தான், 31 பெண் எம்எல்ஏக்கள் என்னுடன் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தவிர, நியமன உறுப்பினராகவும் ஒரு பெண்ணே நியமிக்கப்பட்டார். அதாவது கிட்டத்தட்ட 15 சதவீதப் பெண்கள் சட்டப்பேரவைக்கு 1991ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அதிமுக தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறது. இந்த மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலமாகியும், சில தடைக்கற்கள் காரணமாக இன்னமும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவில்லை.
இதன் விளைவாக மீண்டும் அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் வருகின்ற மக்களவைக் கூட்டத் தொடரிலேயே மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
நம் நாட்டு மக்கள் தொகையில் ஐம்பது விழுக்காடு அளவுக்கு பெண்கள் இருக்கும்போது அவர்கள் புறக்கணிக்கப்பட்டால் நாடு முன்னேற முடியாது என்பதை அனைத்துக் கட்சியினரும் உணர்ந்து, பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் வகையில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டம்:
இந் நிலையில் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த மத்திய அரசு மீண்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி அகர்தலாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த மசோதா வரும் கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும். அதற்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றார்.
நாடாளுமன்றத்தின் 2வது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 15 முதல் மீண்டும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications