தமிழகத்தில் பிடி கத்திரிக்கு அனுமதி கிடையாது – அமைச்சர் தகவல்
சென்னை: தமிழகத்தில் பிடி கத்திரிக்காய் எனப்படும் மரபணு மாற்ற கத்திரிக்காய்க்கு அனுமதி தரப்பட மாட்டாது என்று சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று விவசாய மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம்:
இயற்கை பேரழிவு, பூச்சி நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி பாதிக்காமல் தடுக்க கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் 92 ஆயிரத்து 500 ஏக்கர் தென்னை சாகுபடி பரப்பில் ரூ.265.52 லட்சம் செலவில் தென்னை காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் மேலும் 25 உழவர் சந்தைகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். சந்தையின் அமைவிடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
திருச்சி, மோகனூர், ஸ்ரீவைகுண்டம், சின்னமனூர் ஆகிய இடங்களில் வாழையை பழுக்க வைக்கும் மையங்கள் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும்.
செம்மை நெல் சாகுபடியினை 21.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்வதற்கான செயல்விளக்கம் 50 ஆயிரம் இடங்களில் ரூ.15 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பயறு வகைகளில் 2 சத டி.ஏ.பி. கரைசல் தெளிக்கும் திட்டம் 28 மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் செயல்படுத்தப்படும்.
பயறு உற்பத்தியை பெருக்குவதற்கான வரைவு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஊடுபயிராக இல்லாமல் துவரையை தனிப்பயிராக பயிரிட ஊக்குவிக்கப்படும்.
2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,650 கிராமங்களில் தரமான விதை கிடைக்க விதை கிராம திட்டம் தொடங்கப்படும்.
வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களுக்கு இந்த ஆண்டு 100 ஜீப்புகள் வழங்கப்படும்.
மா, சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.22,500, மானியம் ரூ.30 ஆயிரம் ஆகவும், முந்திரி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம் மானியம் ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் சுய உதவி குழுக்களுக்கு மானியத்தில் வழங்கப்படும்.
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர் ஆகும். இதில் சுமார் 51 லட்சம் ஹெக்டேர்தான் சாகுபடிக்கு உள்ளது. நிகர பாசன பரப்பு 68.63 லட்சம் ஹெக்டேர்.
மேட்டூர் அணை நிரம்பி உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால் மட்டுமே 28.63 லட்சம் ஹெக்டேர் பாசனம் சாகுபடி செய்யப்படும். 22.37 லட்சம் ஹெக்டேர் மானாவரி சாகுபடி நிலப்பரப்பு ஆகும்.
தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு 930 மி.மீ. ஆக உள்ளது. இந்த அளவு மழை பெய்யாவிட்டால் பாதிப்புக்கு ஆளாக வேண்டிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
தமிழகத்தில் பிடி எனப்படும் மரபணு மாற்றக் கத்திரிக்காய்க்கு அனுமதி தருவதில்லை என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே பிடி கத்திரிக்கு இங்கு இடமில்லை.
தமிழகத்தில் டிஏபி, பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. தேவைக்கும் அதிகமாகவே இது இருப்பு உள்ளது.
மாநிலத்தில் இந்த ஆண்டு 112 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை எட்டுவோம்.
செம்மை நெல் சாகுபடி, மண் வள மேம்பாடு ஆகிவற்றில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இந்தப் பிரிவுகளில் முதலிடம் பெறும் விவசாயி, விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் வேளாண்மை அலுவலர் ஒருவர் ஆகியோருக்கு 2010-11ம் ஆண்டு முதல் அண்ணா பெயரில் பதக்கம் அளிக்கப்படும். குடியரசு தின விழாவின்போது முதல்வர் கருணாநிதி இந்த விருதினை வழங்குவார்.
10ம் வகுப்பு வரை படித்த விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மூலம் பண்ணைத் தொழில்நுட்பம் குறித்த 3 ஆண்டு படிப்பு, அஞ்சல் வழியில் நடத்தப்படும் என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications