புதிதாக அமைக்கப்படும் மேலவையில் 78 பேருக்கு பதவி!
சென்னை: திட்டமிட்டபடி தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்கப்பட்டால் 78 பேருக்கு எம்எல்சி பதவி கிடைக்கும்.
விதிகளின்படி மொத்தமுள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மேலவையில் இடம் பெறலாம்.
தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் மேலவையில் 78 பேருக்கு எம்.எல்.சி. பதவி கிடைக்கும்.
இதில் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்து எடுக்கப்படுவோர், எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்படுவோர், ஆசிரியர்கள், பட்டதாரி உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.
78 பேரி்ல் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தடுக்கப்படுவர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்படுவர்.
12 பேருக்கு ஒருவர் ஆசிரியர் பிரதிநிதிகள், பட்டதாரிகள் என்ற அளவில் தேர்வு செய்யப்படுவர். மீதம் உள்ளவர்கள் மாநில அரசின் பரிந்துரைப்படி கவர்னரால் நியமனம் செய்யப்படுவர்.
மேலவைத் தலைவராக ஆளும் கட்சி சார்பில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். உள்ளாட்சி, சட்டசபை ஆகியவற்றில் திமுக உறுப்பினர்களே அதிகம் உள்ளதால் தலைவர் பதவியும் துணைத் தலைவர் பதவியும் ஆளும் கட்சி கூட்டணிக்கே கிடைக்கும்.
கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவிர பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் மேலவையில் இடம் பெறுவது வழக்கம்.
1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் மேலவை கலைக்கப்பட்டபோது மா.பொ. சிவஞானம் தலைவராக இருந்தார்.
1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்வரானபோது அவர் எம்.எல்.ஏ. பதவியில் இல்லை. இதனால் மேலவை உறுப்பினரானார்.
முதல்வர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரும் எம்.எல்.சிகாக இருந்துள்ளனர். மேலவையை எம்ஜிஆர் கலைத்தபோது கருணாநிதியும், அன்பழகனும் எம்.எல்.சிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலவையை அமைப்பது தொடர்பாக நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நேற்றே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications